வீட்டிற்கு ஆகும் செலவுகளில் கோவிலுக்கு செல்லவும்,கடவுளுக்கு சமர்ப்பணம் செய்யத் தேவையான பொருட்கள் வாங்கவும் சேமித்து வைத்திருப்பார்கள்.ஆனால் கண்ணில் படும் ஏழைகளுக்கு அந்த சேமிப்பில் தன்னால் முடிந்த உதவிகளை செய்வோம்,கடவுள் அந்த ரூபத்திலும் இருக்கிறார் என்பதை உணரமாட்டார்கள்.அந்த ஏழைகளை உதாசினப் படுத்தாமல்,கடிந்து கொள்ளாமால் இருந்தால் அப்போதும் கடவுள் தங்களுக்கு அருள் புரிவார் என உணர வேண்டும்.
அர்ச்சனை செய்த பின் ஒரு தேங்காய் மூடி, வெற்றிலைப் பாக்குடன் அர்ச்சனை செய்து தரும் அந்த பூசாரிக்கு (பிராமினருக்கு) கொடுத்தால் நல்லது என்பார்கள் சிலர்.அப்படி கொடுத்தால் சில பூசாரிகள் (அர்ச்சனை செய்து தருபவரை இப்படி குறிப்பிடுகிறேன்.)பெற மறுப்பார்கள்.கோவிலில் பணி புரியும் அவர்களுக்கு கொடுப்பதைத் தவிர வழியில் தென்படும் எளியவர்களுக்குக் கொடுத்தாலும் நல்லதுதான்.அதிலும் சிலர் கவுரவப் பிரச்சனையாகக் கொண்டு பெற மறுத்துவிடுகின்றனர்.
அர்ச்சனை செய்தபின் பத்திரமாக வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.யாருக்காவது கொடுத்தால் நமது புண்ணியம்,கோவிலுக்குள் கடவுள் நமக்குத் தந்த வரம் மற்றவர்களுக்கு போய்விடும், எனவே யாருக்கும் கொடுக்கக் கூடாது என்றும் பலர் செல்லுகின்றனர்.கோவிலில் கொடுக்கப்படும் திருநீற்றையும்,குங்குமத்தையும் வீட்டிற்கு எடுத்துச் சென்றால் போதுமானதாக இருக்காதா?பத்து பேருக்கு அன்னதானம் செய்யாவிட்டாலும்,இந்த சிறிய தானமாவது செய்யலாமே!
கோவில்களும் தற்போது வியாபார சந்தையாகவே மாறி வருகிறது. அங்கனம்,அர்ச்சனை செய்து தருபவர்களே (சில மக்கள் குணம் உணர்ந்தோ என்னவோ) ஒரு தேங்காய் மூடியை எடுத்துக் கொண்டுதான் நமக்குத் தருகிறார்.அப்படியெனில் கடவுள் நமக்குத் தரும் ஆசிகளில் சிறிது அந்த பூசாரிக்கு போய் சேருகிறதே என யாரும் கேட்பதில்லை.அகர்பத்திகள் மற்ற சில பொருட்கள் அப்படியே ஒரு மூலையில் எறியப்படும்.மற்ற மத ஆலயங்களிலும் சில நேரம் பார்த்துள்ளேன்,சில பொருட்கள் தவிர மற்றவைகள் ஓரங்கட்டப்படும்,அதை ஏன் அர்ப்பணிப்புப் பொருளாக வைத்து வியாபாரம் செய்ய வேண்டும்,ஏன் வாங்க வேண்டும்.சிலர் தட்சனை வையுங்கள் என கேட்கின்றனர்.சிலர் ரெண்டு ரூபாய் வைத்தால் கோபத்தில் எடுத்துக் கொள்வதில்லை,மினிமமே ஐந்து ரூபாய் வைக்க வேண்டும்.சில பூசாரிகள் தட்டில் தட்சனை வைத்தால் கூட எனக்கேதற்க்கப்பா உண்டியலில் போடுப்பா என்று சொல்பவரும் இருக்கிறார்கள்.தட்சணை பத்து ரூபாய் வைக்க சில்லரை இல்லாமல் பூசாரியிடமே சில்லரை மாற்றி தட்சணை
வைப்போரும்,பெறுவோரும் உண்டு.
கடவுளுக்கு பூ மாலை தொடுத்து வியாபாரம் செய்பவன், கடவுளே இன்று நிறைய பூவும்,பூ மாலையும்,வியாபாரம் ஆக வேண்டுமென வேண்டிக் கொள்வானாம்.பக்தனில் ஒருவன் கடவுளே உனக்கு ஐந்து ரூபாயில் பூமாலை சாற்றுகிறேன்,எனக்கு இன்ன காரியத்தை நிறைவேற்றிவிடு என்றானாம்,மற்றொரு பக்தன் கடவுளே உனக்கு இருபத்தியைந்து ரூபாயில் பூ மாலை சாற்றுகிறேன் எனக்கு இன்ன காரியத்தை நிறைவேற்றிவிடு என்றானாம்,மற்றொரு பக்தன் கடவுளே உனக்கு அழகான பெரிய பூமாலைகள் வாங்கி அணிவித்து பிரார்த்திக்கும் சக்தி எனக்கு இல்லை, எனவே எனது தோட்டத்தில் உள்ள இந்த செம்பருத்தி பூவையும்,தெரு முனையில் உள்ள நந்தியாவட்டை பூவையும் நானே தொடுத்து வந்துள்ளேன்,எனக்கு இன்ன காரியத்தை நிறைவேற்றிவிடு என்றானாம். இதை நான் எங்கோ எப்போதோ யார் சொல்லியோ கேள்விப்பட்டேன்.
எனக்கு இது சம்பந்தமாக மற்றொன்றும் நினைவிற்கு வந்தது.மொத்த விலை பூ வியாபாரிகளிடம்,பூக்களை படிக்கணக்குகளில் வாங்கி,சுய தொழிலாக வீட்டு வேலைகளை முடித்து விட்டு அந்தப் பூக்களை தொடுத்து அனுப்புவார்கள், அனைத்து மதப் பிரிவினர்களுக்கும், சுப மற்றும் அசுப காரியங்களுக்கும் அந்த பூமாலைகள் பயன்பட்டாலும்,அவர்களுக்கு கொடுக்கப்படும் கூலி மிகச் சொற்பமே.அங்கனம் இவர்கள் தொடுத்ததை வியாபாரம் செய்யப்பட்டு எதோ ஒரு மத கடவுளுக்கு அவர்களின் பூமாலை அணிவிக்கப்பட்டால் கடவுளின் அருளில் இவர்களுக்கு எத்தனை விகிதம் கிடைக்கும். இப்போது கடவுள் யார் பக்கம்? (கடவுள் யாரிடம் டீல் வைத்துக் கொள்வார்)
எதையும் ஆழமாக சிந்தித்து செயல்பட சிரமமேன்றாலும்,கடவுள் பேரில் மூட நம்பிக்கை இல்லாத,மற்றவர்களை பாதிக்காத பக்தி சிறந்தது.