*வணக்கம் வருகைக்கு நன்றி*
Showing posts with label சுய புராணம். Show all posts
Showing posts with label சுய புராணம். Show all posts

Feb 1, 2012

கதம்பம் @ 1/02/2012


சமையல் டிப்ஸ் சொல்லும் அளவிற்கு சமையல் வராது. சமீபமாக நான் செய்துபார்த்த சில குறிப்புகளை - கலப்படங்களை, ஆராய்ச்சிகளை செய்முறைகளை பகிர்ந்துகொள்கின்றேன்.

குலாப் ஜாமூன் செய்ய ரெடிமேட் பவுடர் கிடைப்பது அனைவருக்கும் தெரியும்.தண்ணீர் விட்டு பிசையாமல் தண்ணீருக்கு பதிலாக நன்கு காய்ச்சிய பாலுடன் பிசைந்தால் ருசி கூடுமென ஒரு வட இந்தியப்பெண் சொன்னார்.அப்படி செய்துபார்த்ததில் ருசி கூடியது உண்மைதான்.

சில சமயம் கவனமின்றி கூடுதலாக பால் கலந்துவிட்டால் குலாப்ஜாமூன் உருண்டை பிடிக்கும் பதம் வரவில்லையெனில் வீட்டில் மைதா அல்லது நன்கு சலித்த கோதுமை மாவு கொஞ்சம் கலந்து உருண்டை பிடிக்கலாம்.ருசியில் வித்யாசம் இருக்காது.ரெடிமேட் மாவுடன் மைதா அல்லது கோதுமை மாவு அதிகம் கலந்து்விட்டால் மிருதுவாய் இருக்காது.








சிறுவயதில் கமர்கட்டு மிட்டாய் சாப்பிட்டுருக்கேன். ரொம்ப பிடிக்கும். கணேஷ் சார் அவர்களின் பதிவு ஒன்றில் கமர்கட்டு மிட்டாய் செய்ய குறிப்பு  கொடுத்திருந்தார். எளிமையாகவும் இருந்ததால் ஆர்வத்தில் செய்துபார்த்தேன்.கிட்டத்தட்ட அந்த டேஸ்ட் கிடைத்தது.அவர் சொல்லியிருந்த செய்முறைகளை காப்பி பேஸ்ட் செய்கிறேன்.விரும்பியவர்கள்  செய்துபாருங்கள். 


1கப் தேங்காய்த் துருவலையும், வெல்லத் துருவல் 2 கப்பும், 1 டேபிள் ஸ்பூன் நெய்யையும் எடுத்துக்கங்க. முதல்ல வெல்லத் துருவலை கால் தம்ளர் தண்ணி விட்டு அடுப்புல வெச்சுக் கரைய விடணும். அப்புறம் அந்த வெல்லக்கரைசலை இறக்கி வடிகட்டிக்கோங்க. அடுத்து, வடிகட்டிய வெல்லக் கரைசலை மறுபடி அடுப்புல வெச்சு லேசாக் கொதி வந்ததும் அதோட தேங்காய்த் துருவலை சேர்த்துக் கிளறுங்க.

ஆச்சா... இரண்டும் சேர்ந்து திரண்டு வர்ற சமயத்துல நெய் ஊத்தி நல்லாக் கிளறுங்க. நெய் சேர்ந்து கெட்டியான கலவையா ஆனவுடனே இறக்கிடுங்க. அது சூடு ஆறுவதற்கு முன்னாலயே சட்டுன்னு உருண்டைகளா உருட்டிப் போட்ருங்க. அவ்வளவுதான்!

குளிர்காலங்களில் இட்லி தோசைக்கு மாவு புளிக்க இரண்டு நாளாகலாம்.வட இந்தியா வந்த காலத்தில் அருகிலிருந்த ஒரு தமிழ்பெண் மாவு வைத்திருக்கும் குவளைக்கும் கம்பளி போர்த்தி வச்சிருப்பார்.திவான் எனப்படும் கட்டிலினுள் மாவு வைத்திருக்கும் பாத்திரத்தை வைத்து மூடிவிடுவார்.ஏற்கனவே வைத்திருந்த புளித்த மாவை புதிதாக அரைக்கப்பட்ட மாவுடன் கலந்துவிடுவதாலும் விரைவில் புளிப்புத்தன்மை கிடைக்கும் என்பதும் பலருக்கும் தெரிந்திருக்கும்.

சில வாரங்களுக்கு முன் இட்லிக்கு அரைத்து வைத்திருந்த மாவு புளிக்காததால் சற்று கட்டியாக புளியைக் கரைத்து மாவில் கலந்தேன்.அரை டம்ளர் கரைசல் இருக்கும்.(கரும் புளியாக இருந்தால் கலர் மாறிவிடும்னு நினைக்கிறேன்.).மாவும் சற்று கெட்டிப்பதத்தில் இருந்ததால் இட்லி செய்வதில் பிரச்சனை இல்லை.விரைவில் மாவு புளித்தது.சுவையிலும்,மிருதுத் தன்மையிலும் வித்யாசம் தெரியவில்லை.விரும்பினால் ஒரு ட்ரையல் பாருங்கள்.சரி வல்லைன்னா கம்பெடுத்திட்டு வந்திடாதிங்க.

நெல்லை மாவட்டத்தில் உணவகங்களில் இட்லி மாவில் போரிக் பவுடர் கலந்திருப்பதை கண்டுபிடித்தாங்களாம்.என்னைவிட மோசமா யோசிக்கிறாங்கப்பா.

இட்லி தோசைக்கு மிளகாய்ப் பொடி பலரும் பல சுவைகளில் செய்வோம்.ஊரிலிருந்து வாங்கிவந்த மோர் மிளகாய் நிறைய இருந்தது.சிவப்பு மிளகாய்க்கு பதில் மோர் மிளகாயை வதக்கி உப்பு சேர்க்காமல் இட்லி பொடி  தயார் செய்தேன்.அந்த சுவையும் நன்றாகவே இருந்தது.மோர் மிளகாயின் காரம் மற்றும் உப்புத்தன்மை அறிந்து தேவையான அளவு எடுத்துக்கொள்வது  நல்லது.வெளிர் கலர்தான் கிடைக்கும்.

                                                     
 ________________________________________________________________________
கண்ணைப் பறிக்காத ஒரு பச்சைக் கலர் சேலையில் பார்டர்,எளிய செமிக்கி வேலைப்பாடு,ரோஜாப்பூ எம்பராய்டரி வேலைப்பாடுடன் இருந்தது.வீட்டில் சும்மா இருக்கும் நேரங்களில் என் கைவண்ணத்தை காமிக்க முயற்சித்தேன்.ஒரு புத்தகத்திலிருந்து பூச்செடியை பட்டர் பேப்பரில் வரைந்து சேலையின் அடிப்பாகத்தில் வைத்து ட்ரேஸ் எடுத்துக்கொண்டேன்.3டி கலர்ஸ்,ஃபேப்ரிக் பெயிண்டிங் செய்துள்ளேன்.
                              
                              
சேலையின் முதல் முழம் விட்டு அடுத்தடுத்து 10 இடத்தில் வரைந்தேன். புகைப்படத்தில் சேலையின் வண்ணம்   குறைவாகவே தெரிகிறது.   
    
                                  
____________________________________________________________________

எங்கள் குடியிருப்பு பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது பற்றி கடந்த பதிவில் பகிர்ந்திருந்தேன்.அதில் மேலும் சில நிகழ்வுகளை சொல்ல வேண்டும்.வருடக் கடைசி நாள் அதாவது 31 டிசம்பர் இரவு கலைநிகழ்ச்சிகள்,பொது விருந்து,சிறிய ஆர்க்கெஸ்ட்ரா குழுவின் பாடல் நடனங்களும் நடைபெறும்.

ஒரு ராஜஸ்தானி தாய் விருந்திற்கு வரவில்லை.ஏன் என்று கேட்டதற்கு தன் பிள்ளைகள் இருவருக்கும் விடுமுறை இல்லை.அதனால் பிள்ளைகள் வரவில்லை.பிள்ளைகள் இல்லாமல் விருந்திற்கு வர மனதில்லை என்றார்.அந்த தாயின் பிள்ளைகள் இருவரும் வெளியூரில் ஹாஸ்டலில் தங்கி  இன்ஜினியரிங் கல்லூரிகளில் படிக்கின்றனர்.பிள்ளைகளின் கல்லூரி புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பணம் அனுப்பியதையும் கிறிஸ்துமஸின் போது தெரிவித்தார்.

குடியிருப்புவாசிகளின் 15 வயதுக்குட்பட்ட  சிறுமிகளின் நடனம் நடைபெறும்.குடியிருப்புவாசிகளின் நிகழ்ச்சிகளெல்லாம் அமைதியாக நடைபெறும்.வெளி நடனக்குழுவினர் (அதுவும் வட இந்திய நடனக் குழு)அதே குடியிருப்புவாசிகளிடம் ஆர்ப்பாட்டம்,அதிகக் கைத்தட்டல்,விசில் பறக்கும்.

ஆந்திர பெண்மணியின் ஆறாம் வகுப்பு படிக்கும் மகளும் 3 பாடல்களுக்கு அழகாக எளிமையாக நடனமாடினாள்.எந்த நிகழ்ச்சி நடந்தாலும் நடனம் ஆடும் சிறுமிகளில் இவளது நடனமும் இடம்பெறும்.ஆனால் அந்த சிறுமியின் அம்மா என்னிடம் பகிர்ந்துகொண்டது என்ன தெரியுமா?

அவர் ஆந்திராவிலிருந்து பத்து வருடங்களுக்கு முன் இங்கு குடித்தனம் வந்தாராம்.அப்போது 8,10 வயதிலிருந்த ஆண் பிள்ளைகள் இன்று இளைஞனாகி குடியிருப்புவாசிகளின் நிகழ்ச்சிகளுக்கு அமைதியாகவும்,வெளி நடனக் குழுவினரில் பெண்கள் ஆடும்போது இத்தனை ஆர்ப்பாட்டங்கள் செய்கின்றனர்.அந்த இளைஞர்களின் பெற்றோரும் இங்குதானே அமர்ந்துள்ளனர்.இவர்களுக்கு அச்சமும் இல்லை.பெற்றோர்கள் கண்டிக்கவும் இல்லையே.என் மகளும் நடனத்தில் ஆர்வமாக இருப்பவள் நாளை வெளியிடங்களுக்கு சென்று நடனமாடும்போது என் மகளையும் இப்படித்தானே வெளியாட்கள்  எடைபோடுவார்கள்.

இதனால்தான் என் மகளை நடனங்களில் பங்குபெற வேண்டாம்.உன் திறமையை ஓவியம், பேச்சுப்போட்டி, பியனோ வாசித்தல்  போன்ற போட்டிகளில் காண்பி என்கிறேன்,அல்லது கிளாசிக்கல் நடனத்திற்கு என்றுமே தனி மதிப்புண்டு அதில் மட்டும் கலந்துகொள் என்கிறேன்.என் மகள் நான் சொல்வதை கேட்பதில்லை,என் கணவரும் என் மகள் பக்கம்தான் என்கிறார் அந்த ஆந்திர பெண்மணி. 

விளைவு குடியரசு தின நிகழ்ச்சியில் அந்த சிறுமி தன் அம்மாவிற்கு தெரியாமல் தன் அப்பாவின் துணையுடன் .ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த தேசியநலன்,பெருமை சொல்லும் பாடல் ஒன்றிற்கு பரதநாட்டிய மற்றும் மேற்கிந்திய நடனக் கலவையாக சிறப்பாக அடினாள்.எப்ப ப்ராக்டிஸ் செய்தாள்னே எனக்குத் தெரியாது,எல்லாம் என் கணவரின் சப்போர்ட்டில் நடைபெறுகிறது என்கிறார் அந்த பெண்மணி.

பிள்ளைகளை எதற்காகவும் கட்டாயப்படுத்தக் கூடாதுதான்.ஆனால் என்ன நடந்தாலும் பிள்ளைகளுக்கும் பெற்றோர்க்கும் இடையேயும்,தாய் தந்தையருக்கிடையே பிள்ளைகள் வளர்ப்பிலும்,  ஒளிவு மறைவு இல்லாமல் இருத்தலும் அவசியம்தானே.

Jan 20, 2012

நிகழ்ந்தவைகளும், நிகழுபவைகளும் @ 20/1/2012

விசயம் இருக்கு,ஆனால் இந்த பதிவு சுயதம்பட்டமாக இருக்கலாம் சற்று
பொறுத்துக்கொள்ளவும்.புத்தாண்டு,பொங்கல் எல்லோர்க்கும் நல்லபடியாக அமைந்திருக்கும்னு நினைக்கிறேன்

எங்களுக்கு உதரலும்,உலரலுமாய் புத்தாண்டு பொங்கல் அமைந்தது.(எங்கள் பகுதியில் அதிகமான குளிர்).இந்தியாவில் இருந்தாலும் நம்மூர் பொங்கல் தினங்களுக்கான ஒரு சதவீத ஒற்றுமையும் இல்லாமல் குக்கர் பொங்கல் செய்ததில் ஆற்றாமையில் வந்தது உலரல்.தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கிடையே வந்த கிராமத்து பொங்கல் காட்சிகள் மனதில் ஏக்கத்தை உண்டாக்கியது.


எங்கள் குடியிருப்பு பகுதியில் பல மாநிலத்தவரும் வசிக்கிறோம்.பேச்சுலர்களும் பல மாநிலத்தவர்களே.கிறிஸ்துமஸிலிருந்து புத்தாண்டு தினம் வரை குழந்தைகள்,பெரியோர்களுக்கான நிகழ்ச்சிகள் போட்டிகள் நடைபெறும்.டிசம்பர் 27 ஆம் தேதி பெண்களுக்கான சாலட்(காய்&கனி) அலங்கரித்தல் போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.இரண்டு வருடமாக வேறு சில அலங்கரிக்கும் போட்டிகளில் ஆறுதல் மற்றும் இரண்டாம் பரிசு பெற்று  நொந்துபோனதில் இந்த சாலட் அலங்காரத்தில் நான்  கலந்துகொள்ளவில்லை. இங்குள்ளோரின் கலை & அலங்காரத்திறனிலும்  என்னால் ஈடுசெய்ய முடியலப்பா.

120 குடும்பங்களில் 7 பெண்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.போட்டிக்கு வந்திருந்த 7 பேரின் அலங்கார சாலட்டுகளை பார்த்தவுடன் “நல்லவேளை நான் கலந்துகொண்டு அசிங்கப்படலன்னு” பெருமூச்சு இழுத்துகிட்டேன்.கீழ்வரும் படங்களை பார்த்தால் உங்களுக்கும் புரியும்.

தக்காளியால் செய்யப்பட்ட ரோஜாக்கள்,ஆப்பிளால் செய்யப்பட்ட பறவை. பச்சை மிளகாய், கேரட், முல்லங்கி, மாதுளை, வெல்லரி, மிளகு, கருந்திராட்சையால் செய்யப்பட்ட படைப்பு.
குடைமிளகாய்,முல்லங்கி,கேரட் துருவல்,சிவப்பு முல்லங்கி ரோஜா,தக்காளியால் செய்யப்பட்டுள்ள சாலட் தோட்டம்.அடுத்த சாலட்டில் உருளைக்கிழங்கு பொம்மை குடைமிளகாய் தொப்பி போட்ருக்கு பாருங்க.
மற்ற சாலட்டுகளை நான் கிளிக்கியது தெளிவாக இல்லை.


பதிவை படிப்பவர்கள் மனதை திடப்படுத்திக்கொள்ளுங்கள்.என்ன விசியம் என்றால் டிசம்பர் 29 ஆம் தேதி பெண்களுக்கான மாநில வாரியான உடை,அலங்கார போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.அன்று மாலை வரை எனக்கு பங்குகொள்ள ஆர்வமில்லை.மாலை சில பெண்கள் அவரவர் மாநிலத்து சிறப்பு உடைகளை அணிந்து சென்றனர்.(மேக்கப்பை பற்றி சொல்லவே வேண்டாம்).கேரளத்து பெண்ணும் சென்றார்.போட்டியில் திருமதிகள் மட்டுமே பங்கேற்கின்றனர் என்பதும்,ஆண்களுக்கு இந்த போட்டியைக்காண அனுமதி இல்லை என்றும் அறிந்துகொண்டேன்.ஒரு பெண் என்னிடம்
"உன் மாநிலத்திற்காக நீ கலந்து கொள்ளவில்லையா,உன் மாநிலத்தை விட்டுத்தரப் போறியான்னு"கேட்டு என்னை உசுப்பேத்திவிட்டார்.


ம்.ஹீம்,,விடக்கூடாது,ஜெயித்தாலும்,தோற்றாலும் பரவாயில்லன்னு நம்மூரு பட்டுப்புடவைய கட்டிகிட்டு,சின்னதா திருநீரு,குங்குமம் இட்டுகிட்டு புறப்பட்டுவிட்டேன்.மேக்கப் அவ்ளோதான். 4,5 மாநிலப் பெண்கள் வலம்வந்து முடித்துவிட்டனர். நான்தான் கடைசி ஆளா பேர் கொடுத்தேன்.அப்பதான் இன்னொன்றும் பார்த்தேன் அந்தந்த மாநிலத்தின் நடனமும் ஆடினார்கள்.இரண்டு நிமிடம் போதுமானது.இசை எல்லோருக்குமே ராஜஸ்தானி இசைதான்.கேட்வாக்கும்((பூனை நடை) தமிழாக்கம் சரியா )போகனும்.


கேட்வாக் இருக்கும்,அப்படியே நடந்து போயிட்டு நம்மூரு சிறப்புகள் சிலவற்றை சொல்லிட்டு வந்திடலாம்னுதான் தைரியமா பேர்  கொடுத்தேன்.இப்ப என்ன பன்றதுனு வேடிக்கை பாத்துகிட்டே யோசிச்சிட்டிருந்தேன்.மொத்தமா 15 பெண்கள்,3 ராஜஸ்தானி,2 உத்திரபிரதேசம்,2 ஒரிஸ்ஸா மற்றும் சிலர்.கடைசியா ஒரு முடிவு பண்ணிட்டேன்.கடைசி ஆள் நான்தான்.என் இதயத்துடிப்பு எனக்கே கேக்க ஆரமிச்சிட்டு.


கடைசி ஆளா போன நான் தைரியமா எனக்குத் தெரிந்த பரதநாட்டிய அபிநயங்களை தப்புத்தப்பாதான் ஆடினேன்.பரதநாட்டியம் தமிழகத்தின் கலை நடனங்களில் சிறப்பானது.நான் அணிந்துள்ள பட்டுப்புடவை வண்ணத்துப்பூச்சி லார்வா நிலையில் தயாரிக்கப்படுவது,பட்டுப்புடவை தென்னகத்தின் சிறப்பான முக்கிய ஆடை,அனைத்து சுப நிகழ்விற்கும் வசதிக்கு தகுந்தாற்போல பெண்கள் பட்டுப்புடவை அணிவதையும் வாங்குவதையும்தான் விரும்புவோம்.(வட இந்தியாவில் பட்டுப்புடவை கிடைக்காது).நெற்றியில் வைக்கும் பொட்டிற்கு மேல் திருநீரும்,கீழ் குங்குமமும் வைப்பது சாஸ்திரம்,மருத்துவ குணமும் உண்டு.அனைத்து வீடுகளிலும்,கோவில்களிலும் திருநீரும்,குங்குமமும் கிடைக்கும்,இருக்கும்.உங்களுக்கு செந்தூரம் கோவில்களில் வழங்கப்படுவது போல எங்கள் கோவில்களில் விபூதி,குங்குமம் வழங்கப்படும் என சிறுகுறிப்பு சொல்லிட்டு வந்த போதும்,போகும்போதும் நம்மூர் வணக்கம் தமிழிலே சொல்லி கைகூப்பி வணங்கிட்டு வந்துட்டேன்.

தேர்வு செய்ய 3 பெண் ஜட்ஜ்கள் மதிப்பீட்டில் பிசியாக இருந்தனர்.ரிசல்ட் அறிவிக்கும் இடைவெளியில் பெண்களுக்கு இரண்டு சின்ன சின்ன விளையாட்டுகள் வைத்தனர்.அதில் நான் தோற்றுவிட்டேன்.பெண்கள் நகைச்சுவை துணுக்குகளும் சொன்னார்கள்.ஒரு குஜராத்தி பெண் சர்தார்ஜி ஜோக் சொன்னார்.வட மாநிலத்தவரான நீங்களே சர்தார்ஜிகளை கலாய்ப்பது போலருக்கே என்றேன்.இது எப்படியோ சில சிந்திக்க வைக்கும் ஜோக்குகளெல்லாம் சர்தார்ஜி ஜோக்குகளாகிவிட்டது.சர்தார்ஜி கோவிச்சிக்க மாட்டார் என்றார்.


அவர் சொன்ன ஒரு ஜோக் மட்டும் நினைவில் உள்ளது.
சர்தார்ஜி ஃபோன் பன்றார்,
எதிர் முனையில் ஹலோன்னு ஒரு பெண்குரல் கேக்கிறது,
நீதான ஃபோன் பன்னின நீ முதல்ல சொல்லு நீ யாருன்னு,
நான் பஞ்சாப்லேர்ந்து சர்தார்ஜி பேசுறேன் ,
நான் சீதா பேசுறேன்,
ஹரே! நான் அயோத்திக்கு ஃபோன் செய்துட்டேனா,சாரி,ராங் நம்பர்னு சர்தார்ஜி அழைப்பை கட் செய்திட்டாராம்.


இப்போ ரிசல்ட் அறிவிக்கிறாங்க
மூன்றாம் இடம் முதலில் அறிவிக்கப்பட்டது,என் பேர் இல்லை
இரண்டாம் இடத்திலும் என் பேர் இல்லை,முதலிடத்தை கெஸ் பண்ண சில நொடி தந்தனர்.எனக்கு ஆறுதல் பரிசுதான்னு யோசிச்சுகிட்டிருந்தேன்,
முதல் இடம்,பரிசு.....என் பெயரை.....அறிவித்தனர்.

என்னால் நம்பவே முடியவில்லை,ஓவர் பீட்டர்னு நினைக்காதிங்கப்பா,நிஜமாதான்.முதல் பரிசு கிடைச்சுட்டுப்பா.


மறுநாள் காலை 30ஆம் தேதி தானே புயல் தமிழகத்தை தாக்கியது.என் தவறான பரதநாட்டியத்தால் தமிழ்நாட்டில் இயற்கை பொங்கி எழுந்துவிட்டதுன்னு வீட்டில் கலாய்ப்பு.


பொங்கல்:


வெண்பொங்கல் வெள்ளை நிறத்துடன் செய்திட்டேன்.கரும்பு ஜீஸ் விற்பனையாளரிடமிருந்து கரும்பு வாங்கியாச்சு.சர்க்கரைப் பொங்கல், நான் கலந்த வெல்லத்தின் கலர் மஞ்சளாக இருந்தாலும் இறுதியாக கரும்பொங்கலாகிவிட்டது.இதென்ன இப்படியாகிட்டுனு சுய சிந்தனையில் கொஞ்சம் மஞ்சள் தூளை கலந்தேன்.பச்சை வண்ண சர்க்கரை பொங்கலாகிவிட்டது. இன்றும் ஆராய்ச்சியா?சாப்பிட்டால் சக்கரை பொங்கல் போலதான் இருக்கிறது என்றார் கணவர்.தென்னகத்து பேச்சுலர் ஆசாமியும் இப்படியொரு பச்சை பொங்கல் இப்பதான் அக்கா சாப்பிடுறேன்னு சொல்லிட்டாரு.

நான் செய்த பொங்கலை பக்கத்து வீட்டுக்கு கொஞ்சம் கொடுக்கப்போனால், தட்டில் வைத்திருப்பதை பார்த்து என்னை வித்தியாசமாக பார்த்த சகோதரியிடம் ஆஜ் தோ ஹம்கோ மகரசங்கராந்தி ஹே (இன்றுதான் எங்களுக்கு மகரசங்கராந்தி),யே மீட்டாய் சாவல் ஹே(இது சக்கரை பொங்கல்) என்று விளக்கமளித்து கொடுத்துட்டு வந்தேன்.சாப்டாங்களோ,குப்பையில் வீசினாங்களோ தெரியாது.இங்குள்ளவர்களுக்கு 14 ஆம் தேதியே மகரசங்கராந்தி.அவரவர் முறையில் காலையில் சூரிய பகவானுக்கு பூஜை செய்தார்கள்.குளிரினால் சூரிய பகவான் 8.30க்கு மேல்தான் சற்றே வந்தார்.


ஒய் திஸ் கொலவெறின்னு இந்த பதிவை படிப்பவர்கள் மனதில் தோன்றிற்கலாம் அதனால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.


ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன்

இந்த கொலவெறி பாடல் உலகம் முழுவதும் ஃபேமஸ் ஆகிட்டு,சர்ச்சைகளும் ஆகிட்டு.வட இந்திய சேனல்களிலும் அடிக்கடி இந்த பாடல்தான் வருகிறது.எங்க பக்கத்து வீட்டு வாண்டு பாடுது,ரோட்டோர கடைகள்,செல்லும் வாகனங்களிலும் இந்த பாடலை கேட்கமுடிகிறது.இங்கு கல்யாணம் மற்றும் சில நிகழ்ச்சிகளில் இடம்பெறும் பாடல்களில் “அப்படிப் போடு(விஜய் பாடல்)” இடம்பெறும்,இப்போது இந்த கொலவெறி பாடலும் இடம்பெறுகிறது.

தொலைக்காட்சியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் தொலைபேசியில் தனுசுடன் பேசிய விவேக் அவர்கள் இது தமிழ்பாடல் இல்லை, இங்கிலிஸ் பாடல்ன்னு இங்கிலிஸ்காரன்தான அவங்க அனுமதி இல்லாம பாடலை வெளியிட்டதற்கு எதிர்க்கனும்,ஏன் மற்றவங்களெல்லாம் எதிர்க்கிறாங்கன்னு கேட்டார்.


சரி இந்த வம்பு வேணாம்.அடுத்த பதிவில் சந்திக்கலாம்