*வணக்கம் வருகைக்கு நன்றி*
Showing posts with label தமிழ் வாசம். Show all posts
Showing posts with label தமிழ் வாசம். Show all posts

Oct 19, 2011

பாண்டி நாட்டு தமிழ் - பாகம் 2

முதல் பாகம்  பதிந்த பின் மேலும் சில வார்த்தைகள் நினைவிற்கு வந்தன.

அவைகள் :
இடுப்பு பகுதியை குறுக்கு என்பார்கள்.என் தாத்தா அம்மாச்சியின் கிராமத்தில் பலரும் வேலை பார்த்த அலுப்பில் அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது முதுகு,இடுப்பு வலியெடுத்தால் குறுக்க வலிக்கிதென்று சொல்வதை கேட்டிருக்கிறேன்.


நாகப்பட்டினத்தில் நான் பட்டைய படிப்பு இரண்டாம் ஆண்டு படிக்கும்போதுதான் முதல்வன் திரைப்படம் வெளிவந்தது.அந்த வருட ஆண்டுவிழாவில் முதல்வன் திரைப்படத்தின் குறுக்குச் சிறுத்தவளே பாட்டிற்கு மாணவிகளின் நடனம் நடைபெற்றது.இந்த பாடல் எல்லோருக்கும் பிடித்த பாடல் .கைத்தட்டல்கள் ஆரவாரம் அதிகம் கிடைத்திருந்தது.


கலைநிகழ்ச்சிகள் நிறைவுபெற்று விழாவைப்பற்றி பின்னுட்டமிட்டபடி  குதுகலத்துடன்    பேருந்து நிலையம்   சென்றோம். என்னுடன் வந்த சக மாணவி குறுக்குச் சிறுத்தவளே பாட்டு நல்லாதனிருக்கு மீனிங் இல்லாம பாட்ட ஆரம்பிச்சிருக்கார் பாடலாசிரியர் என்று சொன்னாள்.அவள் சொன்னது குறுக்குச் சிறுத்தவளே என்றால் என்ன அர்த்தம்,அது அர்த்தமற்ற வார்த்தை என்பதுதான்.


அந்த வார்த்தைக்கு அர்த்தமுண்டு.குறுக்கு என்றால் இடை(இடுப்பு).இடை சிறுத்தவளேனு பாட்டு ஆரம்பிக்குதுனு சொன்னதும் சின்னதாய் ஏற்றுக்கொண்டாள்.எனக்கும் பெரிய அறிவியல் கண்டுபிடிப்பை விளக்கியது போல ஒரு சந்தோஷம்.


சளி(ஜலதோஷம்) பிடித்திருந்தால் தடுமம் பிடிச்சிருக்கு என்பார்கள்.


கொத்தவரங்காயை சீனி அவரைக்காய் என்பார்கள்.(இதை ஒரு சகோதரி நினைவுபடுத்தினார்கள்).


கரும்பில் தோகை இருக்குமே அதனை சோகை என்பார்கள்.சோக உரிக்க போறேன் என்று கேள்விப்பட்டதுண்டு.


வீட்டில் அறை(ரூம்) இருந்தால் மச்சி வீடு (அறை உள்ள வீடு) என்பார்கள்.


குதிப்பதற்கு தவ்வுதல் என்பார்கள்.சிறு பிள்ளைகள் குதிக்கும்போது தவ்வாதப்பா என்று சொல்வதை கேட்டிருக்கிறேன்.


 நாளாவது அல்லது ஐந்தாவது பெண்குழந்தை பிறந்தால் போதும்பொண்ணு என்றே பெயர் வைப்பார்கள்.இந்த பெயரை கடைசிவரை  மாற்றமாட்டார்கள்.


களவு (திருட்டு) போய்விட்டது என்பார்கள்.களவாண்ட்டாங்கே (திருடிவிட்டார்கள்) என்பார்கள்.திருடனை களவானி என்பார்கள்.திருட்டுப்பைய என்று திட்டுவதை களவானிப்பைய என்பார்கள்.


வயிறு வலிக்குதென்றால்  வகுத்த/வவுத்த வலிக்குதுன்னு சொல்லுவார்கள்.செம சிரிப்பு வரும்.


மிகையாகப் பேசுபவர்களை அல்லது பிதற்றுபவர்களை அல்லது ஒருவர் துன்பத்தில் இருக்கும்போது பக்கத்திலிருப்பவர் அவர் பற்றி கவலைப்படாமல் தன் புகழ்,பெருமை பேசுபவர்களின் நிலையை பகுமானம் என்பார்கள்.பெருமை பேசும்போது பகுமானத்த பாரு என்பார்கள்.


ஒரு சமயம் குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்குச் சென்றோம்.
பொதுவாக வெட்ட பயன்படும் கத்தியை என் தாத்தா வெட்டுக்கத்தி என்பார்.அங்கு பலரும் அறிந்த வார்த்தைதான் இந்த வெட்டுக்கத்தி.வீட்டிலிருந்து புறப்படும்போதே மற்ற பொருள்களுடன் அந்த வெட்டுக்கத்தியையும் எடுத்து வைக்க சொன்னார்.பூசாரி இல்லையென்றால் நாமேதான் எல்லாம் செய்யனும்.பக்கத்திலே வாழை மரங்கள் இருக்கும்.வாழை இலைகள் வெட்ட உதவும் என்றார்.




கோவில் அமைந்திருக்கும்  கிராமம் தொன்மையான மிக அழகான கிராமம்.மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்காது. கண்ணுக்கெட்டிய  தூரம்  வரை  வீடுகள்  கிடையாது.  சுற்றிலும்   மலைகளும், கரும்பு,கம்பு, நிலக்கடலை,துவரம்பருப்பு, எள், வெங்காய விளைநிலங்கள் இருந்தன. அங்கிருந்த இயற்கை சூழலே அருமையாக  இருந்தது.

எங்கெங்கிருந்தோ அந்த கோவிலுக்கு வருபவர்களே அதிகம். கிராமத்து பூசாரி தமிழ் பாடலை பாடி அபிசேக அர்ச்சனை செய்தார்.கோவில் வாசலில் நான்கு வயது முதல் பத்து வயதுவரை மதிக்கத்தக்க பிள்ளைகள் பிரசாதத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.அந்த கிராமத்து பிள்ளைகளாக இருக்கலாம்.

என் அம்மா அந்த பிள்ளைகளுக்கு கொடுப்பதற்காக தட்டில் தின்பொருட்கள்,பிராசதங்களை பிரித்துக்கொண்டிருந்தார்.சிறுவர்கள் கூடினர்.என் தாத்தா சற்று உரத்தக் குரலில் அந்த வெட்டுக்கத்திய எடும்மா என்றதும் ஒரு சிறுவன் எடுத்தானே ஓட்டம்.அலரி அடித்துக்கொண்டு ஓடினான்.யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.என் அம்மா வேறு ஓடுபவனை நில்லுப்பா,நில்லுப்பாங்கிறாங்க.

வெட்டுக்கத்திய எடுன்னு சொன்னவுடன் ஓட்றேயான் (ஓடுறான்) போலருக்கும்மான்னு தாத்தா சொன்னவுடன் எல்லோருக்கும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை,அதே நேரத்தில் பாவமாகவும் இருந்தது.என் தாத்தா தேங்காய் கீறுவதற்குதான்  வெட்டுக்கத்தி கேட்டாராம்.ஓடிய சிறுவனின் பங்கை மற்ற சிறுவன் ஒருவனுக்கு சேர்த்து  கொடுத்து ஓடியவனிடம் கொடுத்துவிட சொன்னோம்.மறக்க முடியாத நிகழ்வு அது.

மேலும் பாண்டி நாட்டு தமிழ் நினைவிற்கு வந்தால் 3 ஆம் பகுதியாக சந்திப்போம்.

Sep 11, 2011

பாண்டி நாட்டு தமிழ்

பாண்டிய நாடு என்றாலே மதுரைதானே நினைவிற்கு வரும். தமிழ்நாட்டிற்குள்ளே மண்வாசம் மிகுந்த,உச்சரிப்பிலே பாசத்துடன் பேசும் தமிழாக எனக்குத் தெரிந்த,பிடித்த தமிழ், மதுரை மாவட்ட தமிழ். பள்ளி விடுமுறையில் மதுரையில் ஒரு கிராமத்தில் வசிக்கும் என் தாத்தா அம்மாச்சி(அம்மாவின் பெற்றோர்) வீட்டிற்கு செல்வது வழக்கம். நான் லண்டனிலிருந்து மதுரை செல்லவில்லை.நாகப்பட்டினத்திலிருந்து மதுரை சென்ற எனக்கு தமிழ் பேசும் வித்யாசத்தில் புரியாமலிருந்ததென்றால் நம்பமுடியுமா?
எனக்கு நினைவில் இருப்பதை பகிர விரும்புகிறேன்.

தூக்குப்பனிய எடுத்துட்டு வா என்றால் என்னவென்று தெரியாமல் விழித்ததுண்டு.தூக்குப்பனி என்றால் பிடி உள்ள சின்ன சில்வர் வாலி போல ஒரு பாத்திரம்.

இந்த பெண் தலைமேல்
துணிசுற்றி வைத்திருப்பது
பெயர் சுறுமாடு என்பார்கள்.
சுறுமாட்டிற்கு மேலிருக்கும்
பாத்திரம்தான்,தவளைப்பானை.

குடிநீர் குழாய்கள் அல்லது எந்த குழாய்களானாலும் ,ஆங்கில சொல் என்பது தெரிந்தோ தெரியாமலோ பைப் என்று சொல்வதுதான் வழக்கம்.ஆனால் என் அம்மாச்சி ஊரில் கொலாயில் கொண்ட பானைய வைனு சொன்னபோதும் புரியாமல் விழித்ததுண்டு.அடி பைப்பை  அடிக்கொலாய் என்பார்கள்.மேலும் எனக்குத் தெரிந்தது மண்ணினால் செய்யப்பட்ட பானைதான் பானை.அம்மாச்சி ஊரில் குடம்,தவளை பேர்தான் பானை.தெருவிலும் சாக்கடையிலும் ஓடுது பாரு அது பேர்தான் தவளை,இது பேர் பானை என்பார்கள்.அப்போ அந்த பானைய என்னான்னு சொல்வாங்கன்னா மம்பானை (மண்பானை) என்பார்கள்.

மிக்சி,கிரைண்டர் வருவதற்கு முன் அந்த காலத்தில் கல்லால் ஆன இயந்திரம் இருக்குமே,அதன் பெயர் கொடக்கல்லுனு நாங்க சொல்லுவோம்.அதை ஆட்டுக்கல்லுனு அம்மாச்சி சொல்வாங்க.அம்மிக்கல்லுக்கு பேரு அம்மிக்கல்லுதான்.

ஒண்டியமா போகனுமா என்றால் அவர்களுக்கு புரியாது.தனியா போகனுமா என்றால்தான் புரியும்.ரொம்ப எட்டி(தொலைவில்) இருக்குல என்றாலும் புரியாது.அதென்ன எட்டி?தொலவா இருக்குனு சொல்லு,அல்லது வெகு தூரம்னு சொல்லு என்பார்கள்.

நாம் எழுதும்போதுதான் வந்தேன்,போனேன்,சொன்னேன், என்று எழுதுவோம்.ஆனால் மதுரையில் இன்றும் வந்தேஏ....போனேஏ..., சொன்னேஏ...என்றுதான் பேசுவார்கள்.கேட்கவே ஆசையாக இருக்கும் . நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது என் அம்மாச்சி ஊரில் பள்ளியில் சேர்ந்து படிக்கும்படியான சூழ்நிலை வந்தது.எனக்கு மறக்க முடியாத நாட்கள் அவைகள்.பெரிய ஆலமரங்கள்,அரசமரங்கள்,வரிசயாக தென்னைமரம்,பனைமரம் பார்டர் போல மலைகள் இவைகளை ரசித்துக்கொண்டே பள்ளிக்குச் செல்வேன்.அங்கு ஆசிரியர்களும் மதுரைத் தமிழில் பேசுவதைப் பார்த்து ரசிக்கவும் முடியாது,சிரிக்கவும் முடியாது.

உதாரணமாக புதுசா வந்திருக்க பிள்ளையா நிஈ.எழுத்துக்கூட்டி வாசிப்பியா?என்றார். என்னவோ வாசிக்கத் தெரியுமான்னு கேக்குறார்னு நினைத்து தெரியாதுனுட்டேன்.நாகப்பட்டினம்ங்கிற வாசிக்க சொல்லித்தரலையா வாத்தியார்க என்றார்.திருதிருன்னு முழித்துக்கொண்டிருக்கையில் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணை வாசிக்க சொன்னார்.புத்தகத்தைப் பார்த்து அந்த பெண் சத்தமாக படிக்கத் துவங்கினாள்.அப்பதான் எனக்கு புரிந்தது சாரு படிக்கத் தெரியுமாங்கிறதைதான் வாசிக்கத் தெரியுமானு கேட்டிருந்திருக்கிறார்.படிக்கத் தெரிந்தும் தெரியாதுனு சொல்லிட்டேனேனு அழ ஆரம்பித்துவிட்டேன்.பயத்தில் அழறேன்னு என்னை சமாதனப்படுத்தினார்.சில மாணவர்கள் படித்த பின் நானும் படிக்கிறேன்னு கஷ்டபட்டு சொன்னேன்.ஆசிரியர் புரிந்துகொண்டு    ம்.. என்றதும் படிக்கத் துவங்கினேன்.தமிழ் பாடம்தான் என்ன பாடம் என்று நினைவில்லை.ஒரு பத்தி படித்து முடித்தவுடன் நல்லாதான வாசிக்கிற,ஏன் வாசிக்கத் தெரியாதுன்ன? என்றவுடன் இன்னும் அழுகைதான் வந்தது.

ப்ரேயரில் நிக்கும்போது ஒரு அழகான டீச்சர் ,கிசும்பு பன்றவங்கே தோல உரிச்சிடிவீண்டா,ஒத்தையில நிக்காதடா,வரிசையில நில்லுங்கடானு சொன்னது எனக்கு புரியல.விசாரித்ததில் கிசும்புனா சேட்டைனு ஒருத்தன் சொன்னான்.சேட்டை என்றால் விசமத்தனம்.பத்து நாள் மட்டுமே அங்கு படித்தேன்.இது போன்று பல வார்த்தைகள் தெரிந்துகொண்டேன்.இப்போது நினைவில் இல்லை.என் அப்பா மீண்டும் நாகப்பட்டினத்து பள்ளியிலே சேர்த்துவிட்டார்.

அதற்கு பின் அம்மாச்சி தாத்தா வீட்டிற்கு விடுமுறைக்கு வருவோம்.
அவற்றில் சில நினைவுகள்:

 தெருவில்  சைக்களில் சாக்கு பைகள் வைத்து    கொடி முந்திரி, கொடி முந்திரி என்று சத்தமிட்டு வியாபாரி வருவது கண்டு முந்திரிபருப்பைதான் விற்கிறார் என தப்பு கணக்கு போட்டுவிட்டேன்.அருகில் வரவும் பார்த்தால் அது திராட்சைப்பழம்.கொடி முந்திரி என்றால்  திராட்சைப்பழமாம்.

ஏதாவது பொருட்களை முறத்தில்  போட்டு சுத்தப்படுத்துவோமே அந்த முறம்  பெயர் சொலகு   என்பார்கள்.
மண்ணெண்ணையை (கரோசின்) சீமஎண்ணைய்  என்பார்கள்.

விளக்கேற்றுவதை -  தீபத்த பொறுத்து என்பார்கள்.
சணலை சரடு என்பார்கள்.பேப்பர் என்றே அனைவரும் சொல்லுவோம்.ஆனால் காகிதம் என்றுதான் சொல்லுவார்கள்.தபால் வந்தால்  கடுதாசி வந்திருக்கு  என்றுதான் சொல்வார்கள்.லெட்டர்னு சொல்லமாட்டார்கள்.
பாலிதீன் பைகளை சவுக்காயப் பை என்பார்கள்.


உண்டனா  செலவழிக்காத என்றால் நிறைய  செலவழிக்காத என்று அர்த்தம்.

என் தாத்தா வெஞ்சனம் வைம்மா என்றால் எனக்கு சிரிப்பு வந்திடும்.வெஞ்சனம் என்றால் என்னனு கேட்டபோது கடிச்சிக்கிறதுதான் என்றார்.அப்படினா சைடிஷ்.சாப்பிடும்போது  சைடிஷ் சேர்த்து சாப்பிடுவோமே அதன் பெயர்தான் வெஞ்சனம்.நல்லா மென்னு சாப்பிடுனு சொல்வதற்கு நல்லா மெண்டு தின்னு என்பார்கள்.மீதமாகும் உணவை குளுதாடியில் கொட்டு என்பார்கள்.குளுதாடி என்றால் மாட்டுக்கு தண்ணீர்,உணவு வைப்பதற்கான தொட்டி.

கூதடிக்குது என்பார்கள்.அப்படியென்றால் குளுருகிறது என்று அர்த்தம்.என் மாமாவுடன் கடைக்கு சென்றேன்,அப்போது சாலையோரம் பைசா புதைந்துகிடப்பது போல் மேல் தோற்றம் தெரிந்தது.அருகில் வந்து பார்த்தால் சோடாமூடி  புதைந்துகிடந்தது.இந்த சிங்கி என்னைய பலதடவை ஏமாற்றியிருக்கு என்றார்.சிங்கி என்றால் என்னவென்று கேட்டால் அந்த சோடாமூடி பெயர்தான் சிங்கி என்றார்.
 
நாம் செல்லப்பெயர் வைத்து அழைப்பது போல் அந்த கிராமத்தில் ஒவ்வொரு வீட்டினரை அடையாளம் சொல்ல தனித்தனி பட்டபெயர் இருக்கும்.அதாவது களத்து மேட்டுக்காரேன்,கூலாச்சி,மற்றும் பூர்வீக ஊர்களின் பெயர்கள் -கோவில்பட்டியா,கொண்டையம்பட்டிக்காரி,அய்யனம்பட்டியா....மற்றும் ஜாதிகளின் பெயர்களும் இடம்பெறும்.

சில வார்த்தைகள் புரியாமல் இருந்தாலும் ’வாம்மா....’’ச்சொல்லுப்பா’அடி ஆத்தே,அவுக சொன்னாக,வந்தாக,அவங்கே வாந்தாய்ங்கே,போனாங்கே,பிள்ள,எம்புட்டு,இம்புட்டு,எத்தே மொக்கம்(எவ்வளவு பெரிய),எத்தே தண்டி(எவ்வளவு கனம்/நீளம்/பெரிய), அங்கிட்டு,இங்கிட்டுஅம்மாச்சி,அம்மத்தா(அம்மாவின் அம்மா),அப்பத்தா(அப்பாவின் அம்மா),மதினி(அண்ணி),பைய நட(மெதுவா நட) இப்படி பல தமிழ் வார்த்தைகளுக்கு எனக்கு தமிழிலே மொழிபெயர்ப்பு செய்ய வேண்டியிருந்தது.இப்போதைக்கு இவைகள் மட்டுமே நினைவில் உள்ளது.

தற்போழுது காலமாற்றத்தில் சில பேச்சு வழக்குகள் மாறியிருக்கலாம்.சமீபமாக தேனீ மாவட்டம்,மதுரை,உசிலம்பட்டி தமிழை,அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளிவரும் திரைப்படங்களை பார்த்திருப்போம்.அதுக்காக மதுரைக்காரவுக தலை வாராம,பரட்டையாகவே இருப்பாங்கன்னு முடிவுபன்னிடாதீக.ரொம்ப பாசக்கார பயபுள்ளைக!உழைப்பாளிக!வம்புக்கு போகமாட்டாங்கே,வந்த வம்ப விடமாட்டாங்கே,நியாயமா நடந்துப்பாங்கேனு சொன்னேஏ....