பேருந்து,ரயில் பயணங்களில் காலம் காலமாக இடம்பெறும் பலவகை திருட்டு,உணவுப் பொருட்களில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து கொள்ளையடித்தலும் நிகழ்ந்து வருகிறது.உழைக்காமல் பொருள் சேர்க்க எத்தனை விதங்களாக யோசித்து தைர்யமாக அத்தனை பேரையும் முட்டாளாக்கி கார்யம் சாதிப்பது கள்வர்களின் கலை.செய்தித்தாள்களிலும்,தொலைக்காட்சியிலும்,அக்கம் பக்கத்திலும் திருட்டுகள் நடப்பதை கேள்விப்பட்டாலும்,பயணங்களில் ஜாக்கரதையாக பயணித்தாலும் திருட பகவான் பார்வை நம்மீது பதிந்துவிட்டால் நம்மளால் தப்பமுடிவதில்லை.
பயணங்களில் யாராவது உணவுப் பொருட்களை கொடுத்தால் தவிர்ப்பது நல்லது.ஆனால் குழந்தைகளுடன் பயணிக்கும்போது இதில் சிரமம் ஏற்படும்.நாம் எதாவது சாப்பிடும்போது எதிரே அல்லது பக்கத்தில் குழந்தைகள் இருந்தால் பார்க்க வைத்து சாப்பிட முடியாது.அப்படி நாம் எதாவது கொடுக்கும்போது நம்மை சந்தேகித்து வேண்டாமென்று மறுத்தால் நம் மனது சங்கடப்படும்.அதே சங்கடத்துடன்தான் நமக்கோ நம் குழந்தைக்கோ எதிரில் உள்ளவர்கள் உணவுப் பொருள் கொடுத்தால் எப்படிப்பட்டவராக இருந்தாலும் மறுத்தாக வேண்டும்.பயணங்களில் நட்பும் கிடைக்கும்,ஏமாற்றங்களும் கிடைக்கும்.
செல்ஃபோன் இல்லாத காலத்திலே நீண்ட தூர பயணமெனில் என் அப்பா எப்போதும் எதில் பயணித்தாலும் நமது முகவரி,நாம் சென்றடைய வேண்டிய முகவரியையும் எழுதி நம்முடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்பார்.யார் எங்கு பயணித்தாலும் தேவையானவைகளை எடுத்து வச்சுட்டியா என்ற கேள்விக்கு அடுத்து அட்ரஸ் எழுதி வச்சிருக்கியா என்றுதான் கேப்பார்.வழியில் என்ன வேணும்னாலும் நடக்கலாம்.எதாவது ஒரு நல்லவன் கண்ல இந்த அடர்ஸ் பட்டு நம்மை உரியவங்க இடத்தில் சேக்க மாட்டானா,தகவல் தெரிவிக்கமாட்டானா... என்பார்.
என் தாத்தா அம்மாச்சி கிராமத்தை சேர்ந்தவர்கள்.பயணத்தில் பக்கத்திலிருப்பவர் கொஞ்சம் பேச்சு கொடுத்தால் போதும் தனது பூர்வீகம் வரை ஒப்பித்துவிடுவார்கள்.பக்கத்தில் கிடைப்பவரும் இவர்களது பேச்சை கேட்டு சலிக்கிற மாதிரி தெரியாது,அப்படிப்பட்டவர்தான் அமைந்துவிடுவார்.சில நேரம் இப்படி எல்லா கதையும் ஏன் சொல்றீங்கன்னு திட்டுவோம், சில நேரம் அருகில் போய் நிறுத்துங்கன்னு சொல்ல முடியாது.
எங்க வீட்டில் லேண்ட் லைன் ஃபோன் இருந்த காலத்தில் ஒருமுறை என் தாத்தா மதுரையிலிருந்து நாகைக்கு தனியே இரவு நேர பஸ்ஸில் வந்திருக்கிறார்.விடிய காலையில் ஃபோன் வந்தது,நான்தான் பேசினேன்,அதில் “நான் ஆட்டோ டிரைவர்,மதுரை பஸ்சிலிருந்து ஒரு பெரியவரை நாகை பஸ்டாண்டின் நடுவே இறக்கிவிட்டு சென்றுவிட்டனர்.அவர் போதையில் கிடக்கிறார்.அவரது சட்டைப் பையில் இந்த நம்பரும் அட்ரசும் இருக்கிறது,இன்ன பேர் உடைய இவரை உங்களுக்குத் தெரியுமா? ”என்றார்.
மற்ற அடையாளங்களும் சொன்னதில் அவர் என் தாத்தாதான். தான் வருவதாக எங்களுக்கு தகவலும் சொல்லவில்லை என்று சொல்லிக்கொண்டே இருக்கிறேனே தவிர என்ன பேசனும்னு தெரியவில்லை,என் அப்பாவும் அப்போது வீட்டில் இல்லை.என் அம்மாவிற்கும் நம்புவதா வேணாமான்னு புரியாமல் இந்த முகவரிக்கு அழைத்து வாருங்கள்,உடல் நிலை சரியில்லையென்றால் வழியில் ஹாஸ்பிடலில் சேர்த்துவிடுங்கள் ஆகும் செலவை நாங்கள் ஏற்கிறோம்,அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.
அவர் போதையில் இருக்கிறார் என்பதைதான் எங்களால் நம்ப முடியவில்லை என்று அம்மா சொல்லிவிட்டு என் அப்பாவிற்கும் தகவல் தெரிவித்தார்.
பத்து நிமிடங்களில் ஆட்டோ என் வீட்டிற்கு வந்தது.சுய நினைவின்றி சட்டை ட்ராயருடன் உள்ளிருந்தது என் தாத்தாவேதான். அந்த கோலத்தில் பார்த்தால் என் அம்மாவிற்கு எப்படியிருக்கும்,என்னாச்சுப்பா,என்னாச்சுப்பான்னு கதறினார். ஹாஸ்பிடலில் சேர்த்தோம், அந்த ஆட்டோ ட்ரைவருக்கும் நன்றி தெரிவித்து பணம் கொடுத்தபோது அவர் வாங்க மறுத்துவிட்டார்.ஹாஸ்பிடலில் தாத்தாவிற்கு முற்றிலும் நினைவு இழந்துவிட்டது,கோமா ஸ்டேஜ் என்கிறார்கள்.எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.தாத்தா ஏன் புறப்பட்டு வந்தார்,எதற்கு எங்கே கிளம்பினார் ஒன்றும் தெரியவில்லை.மதுரையில் இருக்கும் என் அம்மாச்சிக்கு தகவல் தெரிவித்ததும் விபரம் புரிந்தது,தாத்தா எங்களை பார்க்க உசிலம்பட்டி பஸ்ஸில் வந்திருக்கிறார்.அம்மாச்சி மற்ற உறவினர்களுடன் கதிகலங்கி வந்து சேர்ந்தார்.
ஊருக்குள்ளும் ஒரே பரபரப்பு,தாத்தாவை பார்க்க பலரும் வந்தவன்னம் இருந்தனர்.சீடி ஸ்கேன் எடுத்தார்கள்,எல்லா டெஸ்ட்டுகளும் நார்மலா இருக்கு,அவர் கடைசியாக உண்ட உணவினால் இந்த பிரச்சனையிருக்கலாம்,வேற ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு போயிடுங்கனு டாக்டர் சொல்லிட்டார்.அன்று முழுவதும் அதே நிலையிலிருந்த தாத்தா மறுநாள் காலை கண் விழித்தார்.அவருக்கும் சற்று நேரம் தான் எங்கிருக்கிறோம்,தனக்கு என்னாச்சுன்னு புரியவில்லை,பேச்சும் வரவில்லை.சற்று நேரம் கழித்து பேச்சு வந்தது.நாங்களும் விபரங்கள் சொல்ல என் அம்மாச்சி அப்போதுதான் கேட்கிறார் ” தாத்தா கொண்டுவந்த பைகள்,கையில் போட்ருந்த மோதிரம்,வைத்திருந்த பணம் “ இல்லையா?ஆட்டோவில் தாத்தா மட்டும்தான் வந்தாரா என்கிறார்.சூழ்நிலையின் கட்டாயம் அப்போது லேசான சந்தேகம் அந்த ஆட்டோ டிரைவர் மீது வந்தாலும் முதலில் இன்றும் அதே நேரத்திற்கு வரும் உசிலம்பட்டி பஸ் டிரைவரை விசாரிப்போம் என்று என் அப்பா சொன்னார்.
அதற்கிடையில் என் தாத்தாவும் பேச ஆரம்பித்தார்.பஸ்ஸில் தன்னுடன் வந்தவருடன் பேசிக்கொண்டு வந்ததாகவும்,கோவில் பிரசாதமென்று பொங்கல் கொடுத்ததாகவும்,அதை சாப்பிட்ட பின் என்ன நடந்ததுன்னு தெரியவில்லை என்றும் சொன்னதில் விபரம் புரிந்தது.தான் கொண்டு வந்த பொருட்கள் களவாடப்பட்டதை விட தன்னால் எல்லோரும் இவ்வளவு சிரமத்திற்குள்ளானதிலும்,பொங்கல் சாப்பிட்டு ஏமாந்ததிலும் என் தாத்தாவிற்கு பெரும் வருத்தம்,அவமானமாகவும் நினைத்தார்.என் அப்பாவும் பஸ் டிரைவர் ஓட்டுனரை விசாரித்ததில் என்ன நடந்ததென்று எங்களுக்குத் தெரியாது,எல்லோரும் இறங்கியும் இவர் மட்டும் இறங்காமல் மயக்கத்திலே இருந்தார்,நாகைதான் கடைசி நிறுத்தம்,டிக்கெட்டும் நாகைக்குதான் எடுத்திருந்தார் எனவே எங்களுக்கு வம்பெதற்கு,அடுத்த ட்ரிப் போகனும்னு அவரை இறக்கி கீழே போட்டுவிட்டோம்.வேட்டி அவிழ்ந்த நிலையில்தான் இருந்தார்,என்றும் தெரிவித்திருந்திருக்கின்றனர். இந்த நிகழ்வு தெரிந்த அனைவருக்கும் பாடமானது.அதற்கு பிறகு என் தாத்தா அம்மாச்சி பயணத்தில் சக பயணிகளுடன் வெகு ஜாக்கிரதையாக பயணிப்பார்கள்.
பயணங்களில் எவ்வளவோ பொன் பொருட்களை பரிகொடுத்தவர்களின் நிலை எப்படிப்பட்டதாக இருக்கும்!
பேருந்து மட்டுமல்ல அனைத்து பயணங்களும் நாம் வாழும் உலகின் மறுபக்கங்களில் ஒன்றை உணர்த்துவதாகவே அமைகிறது.
கள்வர்களே!
வீரமும்,மானமும் உள்ள கள்வர்களாயின் ஸ்விஸ் பேங்கிற்கு போய் இந்தியப் பணத்தை களவாடிட்டு வாங்க பாப்போம்!இந்தியா பாராட்டும்.(இந்தியா டு ஸ்விஸ் ரயில், பஸ் இன்னும் விடலையோ).இந்தியாவின் பேங்குகளில் அப்பாவி மக்கள் அதுவும் அப்பாவி பேங்குகளில் சேர்த்து வைத்திருப்பதில் கை வைத்தால் என்கவுண்டர்தான்.
பீ கேர்ஃபுல்...........................................
மக்களை சொன்னேன்,,,,