*வணக்கம் வருகைக்கு நன்றி*

Jan 20, 2012

நிகழ்ந்தவைகளும், நிகழுபவைகளும் @ 20/1/2012

விசயம் இருக்கு,ஆனால் இந்த பதிவு சுயதம்பட்டமாக இருக்கலாம் சற்று
பொறுத்துக்கொள்ளவும்.புத்தாண்டு,பொங்கல் எல்லோர்க்கும் நல்லபடியாக அமைந்திருக்கும்னு நினைக்கிறேன்

எங்களுக்கு உதரலும்,உலரலுமாய் புத்தாண்டு பொங்கல் அமைந்தது.(எங்கள் பகுதியில் அதிகமான குளிர்).இந்தியாவில் இருந்தாலும் நம்மூர் பொங்கல் தினங்களுக்கான ஒரு சதவீத ஒற்றுமையும் இல்லாமல் குக்கர் பொங்கல் செய்ததில் ஆற்றாமையில் வந்தது உலரல்.தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கிடையே வந்த கிராமத்து பொங்கல் காட்சிகள் மனதில் ஏக்கத்தை உண்டாக்கியது.


எங்கள் குடியிருப்பு பகுதியில் பல மாநிலத்தவரும் வசிக்கிறோம்.பேச்சுலர்களும் பல மாநிலத்தவர்களே.கிறிஸ்துமஸிலிருந்து புத்தாண்டு தினம் வரை குழந்தைகள்,பெரியோர்களுக்கான நிகழ்ச்சிகள் போட்டிகள் நடைபெறும்.டிசம்பர் 27 ஆம் தேதி பெண்களுக்கான சாலட்(காய்&கனி) அலங்கரித்தல் போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.இரண்டு வருடமாக வேறு சில அலங்கரிக்கும் போட்டிகளில் ஆறுதல் மற்றும் இரண்டாம் பரிசு பெற்று  நொந்துபோனதில் இந்த சாலட் அலங்காரத்தில் நான்  கலந்துகொள்ளவில்லை. இங்குள்ளோரின் கலை & அலங்காரத்திறனிலும்  என்னால் ஈடுசெய்ய முடியலப்பா.

120 குடும்பங்களில் 7 பெண்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.போட்டிக்கு வந்திருந்த 7 பேரின் அலங்கார சாலட்டுகளை பார்த்தவுடன் “நல்லவேளை நான் கலந்துகொண்டு அசிங்கப்படலன்னு” பெருமூச்சு இழுத்துகிட்டேன்.கீழ்வரும் படங்களை பார்த்தால் உங்களுக்கும் புரியும்.

தக்காளியால் செய்யப்பட்ட ரோஜாக்கள்,ஆப்பிளால் செய்யப்பட்ட பறவை. பச்சை மிளகாய், கேரட், முல்லங்கி, மாதுளை, வெல்லரி, மிளகு, கருந்திராட்சையால் செய்யப்பட்ட படைப்பு.
குடைமிளகாய்,முல்லங்கி,கேரட் துருவல்,சிவப்பு முல்லங்கி ரோஜா,தக்காளியால் செய்யப்பட்டுள்ள சாலட் தோட்டம்.அடுத்த சாலட்டில் உருளைக்கிழங்கு பொம்மை குடைமிளகாய் தொப்பி போட்ருக்கு பாருங்க.
மற்ற சாலட்டுகளை நான் கிளிக்கியது தெளிவாக இல்லை.


பதிவை படிப்பவர்கள் மனதை திடப்படுத்திக்கொள்ளுங்கள்.என்ன விசியம் என்றால் டிசம்பர் 29 ஆம் தேதி பெண்களுக்கான மாநில வாரியான உடை,அலங்கார போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.அன்று மாலை வரை எனக்கு பங்குகொள்ள ஆர்வமில்லை.மாலை சில பெண்கள் அவரவர் மாநிலத்து சிறப்பு உடைகளை அணிந்து சென்றனர்.(மேக்கப்பை பற்றி சொல்லவே வேண்டாம்).கேரளத்து பெண்ணும் சென்றார்.போட்டியில் திருமதிகள் மட்டுமே பங்கேற்கின்றனர் என்பதும்,ஆண்களுக்கு இந்த போட்டியைக்காண அனுமதி இல்லை என்றும் அறிந்துகொண்டேன்.ஒரு பெண் என்னிடம்
"உன் மாநிலத்திற்காக நீ கலந்து கொள்ளவில்லையா,உன் மாநிலத்தை விட்டுத்தரப் போறியான்னு"கேட்டு என்னை உசுப்பேத்திவிட்டார்.


ம்.ஹீம்,,விடக்கூடாது,ஜெயித்தாலும்,தோற்றாலும் பரவாயில்லன்னு நம்மூரு பட்டுப்புடவைய கட்டிகிட்டு,சின்னதா திருநீரு,குங்குமம் இட்டுகிட்டு புறப்பட்டுவிட்டேன்.மேக்கப் அவ்ளோதான். 4,5 மாநிலப் பெண்கள் வலம்வந்து முடித்துவிட்டனர். நான்தான் கடைசி ஆளா பேர் கொடுத்தேன்.அப்பதான் இன்னொன்றும் பார்த்தேன் அந்தந்த மாநிலத்தின் நடனமும் ஆடினார்கள்.இரண்டு நிமிடம் போதுமானது.இசை எல்லோருக்குமே ராஜஸ்தானி இசைதான்.கேட்வாக்கும்((பூனை நடை) தமிழாக்கம் சரியா )போகனும்.


கேட்வாக் இருக்கும்,அப்படியே நடந்து போயிட்டு நம்மூரு சிறப்புகள் சிலவற்றை சொல்லிட்டு வந்திடலாம்னுதான் தைரியமா பேர்  கொடுத்தேன்.இப்ப என்ன பன்றதுனு வேடிக்கை பாத்துகிட்டே யோசிச்சிட்டிருந்தேன்.மொத்தமா 15 பெண்கள்,3 ராஜஸ்தானி,2 உத்திரபிரதேசம்,2 ஒரிஸ்ஸா மற்றும் சிலர்.கடைசியா ஒரு முடிவு பண்ணிட்டேன்.கடைசி ஆள் நான்தான்.என் இதயத்துடிப்பு எனக்கே கேக்க ஆரமிச்சிட்டு.


கடைசி ஆளா போன நான் தைரியமா எனக்குத் தெரிந்த பரதநாட்டிய அபிநயங்களை தப்புத்தப்பாதான் ஆடினேன்.பரதநாட்டியம் தமிழகத்தின் கலை நடனங்களில் சிறப்பானது.நான் அணிந்துள்ள பட்டுப்புடவை வண்ணத்துப்பூச்சி லார்வா நிலையில் தயாரிக்கப்படுவது,பட்டுப்புடவை தென்னகத்தின் சிறப்பான முக்கிய ஆடை,அனைத்து சுப நிகழ்விற்கும் வசதிக்கு தகுந்தாற்போல பெண்கள் பட்டுப்புடவை அணிவதையும் வாங்குவதையும்தான் விரும்புவோம்.(வட இந்தியாவில் பட்டுப்புடவை கிடைக்காது).நெற்றியில் வைக்கும் பொட்டிற்கு மேல் திருநீரும்,கீழ் குங்குமமும் வைப்பது சாஸ்திரம்,மருத்துவ குணமும் உண்டு.அனைத்து வீடுகளிலும்,கோவில்களிலும் திருநீரும்,குங்குமமும் கிடைக்கும்,இருக்கும்.உங்களுக்கு செந்தூரம் கோவில்களில் வழங்கப்படுவது போல எங்கள் கோவில்களில் விபூதி,குங்குமம் வழங்கப்படும் என சிறுகுறிப்பு சொல்லிட்டு வந்த போதும்,போகும்போதும் நம்மூர் வணக்கம் தமிழிலே சொல்லி கைகூப்பி வணங்கிட்டு வந்துட்டேன்.

தேர்வு செய்ய 3 பெண் ஜட்ஜ்கள் மதிப்பீட்டில் பிசியாக இருந்தனர்.ரிசல்ட் அறிவிக்கும் இடைவெளியில் பெண்களுக்கு இரண்டு சின்ன சின்ன விளையாட்டுகள் வைத்தனர்.அதில் நான் தோற்றுவிட்டேன்.பெண்கள் நகைச்சுவை துணுக்குகளும் சொன்னார்கள்.ஒரு குஜராத்தி பெண் சர்தார்ஜி ஜோக் சொன்னார்.வட மாநிலத்தவரான நீங்களே சர்தார்ஜிகளை கலாய்ப்பது போலருக்கே என்றேன்.இது எப்படியோ சில சிந்திக்க வைக்கும் ஜோக்குகளெல்லாம் சர்தார்ஜி ஜோக்குகளாகிவிட்டது.சர்தார்ஜி கோவிச்சிக்க மாட்டார் என்றார்.


அவர் சொன்ன ஒரு ஜோக் மட்டும் நினைவில் உள்ளது.
சர்தார்ஜி ஃபோன் பன்றார்,
எதிர் முனையில் ஹலோன்னு ஒரு பெண்குரல் கேக்கிறது,
நீதான ஃபோன் பன்னின நீ முதல்ல சொல்லு நீ யாருன்னு,
நான் பஞ்சாப்லேர்ந்து சர்தார்ஜி பேசுறேன் ,
நான் சீதா பேசுறேன்,
ஹரே! நான் அயோத்திக்கு ஃபோன் செய்துட்டேனா,சாரி,ராங் நம்பர்னு சர்தார்ஜி அழைப்பை கட் செய்திட்டாராம்.


இப்போ ரிசல்ட் அறிவிக்கிறாங்க
மூன்றாம் இடம் முதலில் அறிவிக்கப்பட்டது,என் பேர் இல்லை
இரண்டாம் இடத்திலும் என் பேர் இல்லை,முதலிடத்தை கெஸ் பண்ண சில நொடி தந்தனர்.எனக்கு ஆறுதல் பரிசுதான்னு யோசிச்சுகிட்டிருந்தேன்,
முதல் இடம்,பரிசு.....என் பெயரை.....அறிவித்தனர்.

என்னால் நம்பவே முடியவில்லை,ஓவர் பீட்டர்னு நினைக்காதிங்கப்பா,நிஜமாதான்.முதல் பரிசு கிடைச்சுட்டுப்பா.


மறுநாள் காலை 30ஆம் தேதி தானே புயல் தமிழகத்தை தாக்கியது.என் தவறான பரதநாட்டியத்தால் தமிழ்நாட்டில் இயற்கை பொங்கி எழுந்துவிட்டதுன்னு வீட்டில் கலாய்ப்பு.


பொங்கல்:


வெண்பொங்கல் வெள்ளை நிறத்துடன் செய்திட்டேன்.கரும்பு ஜீஸ் விற்பனையாளரிடமிருந்து கரும்பு வாங்கியாச்சு.சர்க்கரைப் பொங்கல், நான் கலந்த வெல்லத்தின் கலர் மஞ்சளாக இருந்தாலும் இறுதியாக கரும்பொங்கலாகிவிட்டது.இதென்ன இப்படியாகிட்டுனு சுய சிந்தனையில் கொஞ்சம் மஞ்சள் தூளை கலந்தேன்.பச்சை வண்ண சர்க்கரை பொங்கலாகிவிட்டது. இன்றும் ஆராய்ச்சியா?சாப்பிட்டால் சக்கரை பொங்கல் போலதான் இருக்கிறது என்றார் கணவர்.தென்னகத்து பேச்சுலர் ஆசாமியும் இப்படியொரு பச்சை பொங்கல் இப்பதான் அக்கா சாப்பிடுறேன்னு சொல்லிட்டாரு.

நான் செய்த பொங்கலை பக்கத்து வீட்டுக்கு கொஞ்சம் கொடுக்கப்போனால், தட்டில் வைத்திருப்பதை பார்த்து என்னை வித்தியாசமாக பார்த்த சகோதரியிடம் ஆஜ் தோ ஹம்கோ மகரசங்கராந்தி ஹே (இன்றுதான் எங்களுக்கு மகரசங்கராந்தி),யே மீட்டாய் சாவல் ஹே(இது சக்கரை பொங்கல்) என்று விளக்கமளித்து கொடுத்துட்டு வந்தேன்.சாப்டாங்களோ,குப்பையில் வீசினாங்களோ தெரியாது.இங்குள்ளவர்களுக்கு 14 ஆம் தேதியே மகரசங்கராந்தி.அவரவர் முறையில் காலையில் சூரிய பகவானுக்கு பூஜை செய்தார்கள்.குளிரினால் சூரிய பகவான் 8.30க்கு மேல்தான் சற்றே வந்தார்.


ஒய் திஸ் கொலவெறின்னு இந்த பதிவை படிப்பவர்கள் மனதில் தோன்றிற்கலாம் அதனால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.


ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன்

இந்த கொலவெறி பாடல் உலகம் முழுவதும் ஃபேமஸ் ஆகிட்டு,சர்ச்சைகளும் ஆகிட்டு.வட இந்திய சேனல்களிலும் அடிக்கடி இந்த பாடல்தான் வருகிறது.எங்க பக்கத்து வீட்டு வாண்டு பாடுது,ரோட்டோர கடைகள்,செல்லும் வாகனங்களிலும் இந்த பாடலை கேட்கமுடிகிறது.இங்கு கல்யாணம் மற்றும் சில நிகழ்ச்சிகளில் இடம்பெறும் பாடல்களில் “அப்படிப் போடு(விஜய் பாடல்)” இடம்பெறும்,இப்போது இந்த கொலவெறி பாடலும் இடம்பெறுகிறது.

தொலைக்காட்சியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் தொலைபேசியில் தனுசுடன் பேசிய விவேக் அவர்கள் இது தமிழ்பாடல் இல்லை, இங்கிலிஸ் பாடல்ன்னு இங்கிலிஸ்காரன்தான அவங்க அனுமதி இல்லாம பாடலை வெளியிட்டதற்கு எதிர்க்கனும்,ஏன் மற்றவங்களெல்லாம் எதிர்க்கிறாங்கன்னு கேட்டார்.


சரி இந்த வம்பு வேணாம்.அடுத்த பதிவில் சந்திக்கலாம்

Jan 5, 2012

என் வலைதளத்தின் முதல் வருட நிறைவு நாள்

இந்த வலைதளத்தினை எப்போது துவங்கினேன் என்பது நினைவில்லை. எனது முதல் பதி்வு தேசிய மொழி  . வெளியிட்ட நாள், கடந்த ஆண்டு 5/1/2011.இன்றோடு ஒரு வருடம் நிறைவாகிவிட்டது.பதிவுலகம் வந்ததற்கு முதல் காரணம் என் அம்மா என்று பலருக்கும் தெரிந்திருக்கும்.எனினும் பல பதிவர்களின் பதிவுகளை மனதில் கொண்டால் முதல் வருட நிறைவை பதியும் அளவிற்கு தகுதி பெற்றுள்ளேனா என்ற ஐயம் வருகிறது.இரண்டாம் காரணம் அதே சக பதிவர்களின் எழுத்துதான் என்னையும் எழுதத் தூண்டுகிறது.

நான் மிகச் சராசரியான தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த பெண் மட்டுமே.இலக்கண இலக்கியங்கள் பள்ளி படிப்பு வரைக்குமே.பள்ளி படிக்கும்போது தமிழுக்கு மட்டும் மன்றத் தேர்வு என்ற பெயரில் எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பிற்காக  தேர்வு  நடைபெறும்.அதே வகுப்பின் தமிழ் புத்தகம் முழுதும் படித்து எழுத வேண்டும். எட்டாம் வகுப்பு படிக்கும்போது  100 க்கு 94 மதிப்பெண்கள் பெற்று நாகை  மாவட்டளவில் முதல் மதிப்பெண் பெற்றேன்.அதைத் தவிர இன்று தமிழில் வலைதளம் வைத்துள்ளேன் என்பதில் மகிழ்கிறேன். இன்றும் எழுதும்போது  எங்கெங்கு  க்,த்,ப்,சேர்க்க வேண்டுமென்பதிலும் தடுமாறுவேன்.


கடந்த வருடம் இதே தினத்தில் முதல் பதிவு தொடங்கி,மொத்தம் 80 பதிவுகள் வெளியிட்டுள்ளேன்.இந்த வருட இதே தேதியில் இந்தப் பதிவு இரண்டாவது பதிவாகிறது.இன்று வரை 82 பதிவாகிறது.என் பதிவிற்கு முதல் பின்னூட்டமிட்டவர் திரு கே.ஆர்.பி செந்தில் அவர்கள்.திரட்டிகளில் இணைக்கவும் உதவினார்.பின்னூட்டங்கள் என்னை மேம்படுத்த உதவும் என்றெண்ணி சிலருக்கு மெயில் அனுப்பினேன்.அவர்களில் ஒருவர் மட்டுமே என் வலைதளம் வந்து பின்னுட்டமிட்டார்.அவர் கோவை2தில்லி ஆதி அவர்கள்.அதற்கு பின் நான் வெளியிடும் பதிவு எனக்கே சிறந்ததாகப்படும்போது பிறருக்கு மெயில் அனுப்புவேன்.அப்போதெல்லாம் யாராவது பின்னூட்டமிட்டால் மிகவும் சந்தோசப்படுவேன். பதிவு சிறப்பாக இருப்பின் படிப்பவர்கள் தானே முன்வந்து பின்னூட்டமிடுவார்கள் என்பதையும் நாளடைவில் புரிந்துகொண்டேன்.


ஆனால் பல பதிவர்களின்  மிகச் சிறப்பான பதிவுகள்,பலருக்கும் சென்றடைய வேண்டிய பதிவுகள் படிப்பாரற்றும் கிடக்கிறது.பின்தொடர்வோர்கள் இல்லாமல் இருக்கிறது.பி்ன் தொடர்வோர்கள் அதிகம் இருந்தாலும் பின்னூட்டங்கள் இல்லாமல் இருக்கிறது.எல்லோராலும் அனைத்து பதிவர்களின் பதிவுகளையும் படிப்பது இயலாது என்றாலும் நட்பின் அடிப்படையில்,ஈர்ப்பான தலைப்புகளின் அடிப்படையில் ஒருசாராருக்கு சில காலம் பின்னூட்டங்கள் குவிவதும் நாளடைவில் அத்தகைய பதிவர்களுக்கும்  பின்னூட்டங்கள் குறைவதையும் காணும்போது பின்னூட்டங்களின் மீதிருந்த ஆவல் எனக்கு மறைந்தது.


என் எழுத்தின் குறைகளை,பதிவுகளின் எதிர் விமர்சனங்களை ஏற்கும் மனதுண்டு.ஆனால் வீம்புக்கு பின்னூட்டம் வரும்போது அதே வீச்சில்தான் பதில் சொல்ல வேண்டியுள்ளது.நம் எழுத்திற்கு நாமே ராஜா நாமே மந்திரி என்றாலும் தரத்தோடு இருக்க வேண்டும்.அந்தரங்க விசயங்களோ,அல்லது பாலியல் விசயங்களோ ஆண் பதிவர்கள் வெளியிடும்போது படிப்பவர்களின் தேர்வுகளாக மட்டும் உள்ளது.அதே விசயங்களை பெண் பதிவர்கள் சொல்லிவிட்டால் அந்த பெண்ணின் சுயமரியாதையும் கெடுகிறது.பின்னூட்டம் எழுதினால் கூட பதில் எப்படி வருமோ,மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று ஐயப்பட்டு படிக்காதது போல சென்றுவிடுவதே நமக்கு மரியாதை என்பதுதான் பல பெண் பதிவர்களின் நிலைமை.


தொடக்கத்தில் பின்தொடர்வோர் இணைப்பை  இணைக்காமல் இருந்தேன்.கற்றலும் கேட்டலும் ராஜி அவர்கள் பின் தொடர்வோர் இணைப்பை இணைக்கும்படி ஆலோசனை தந்திருந்ததால் அதற்கு பிறகு இணைத்தேன்.என் வலைதளத்தில் இன்று வரை 86 பின்தொடர்வோர்கள் இணைந்துள்ளனர்.என் கையில் பணம் சேர்ந்தால்கூட அப்படி ஒரு சந்தோசம் ஏற்ப்பட்டதில்லை,ஆனால் பின் தொடர்வோர்கள் அதிகரிக்கும்போது என் எழுத்தினால் சம்பாதித்த சொத்தாக பெரும் மகிழ்ச்சியடைவேன்.86 நபர்களுக்கும்  என்  நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


ஒரு பதிவிற்கு 10 ரூபாய் அல்ல 10 பைசா கூட கிடைக்காதுன்னு அனைவருக்கும் தெரியும் அப்படியிருந்தும் பதிவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறதே தவிர குறையவில்லை.பணியில் இருப்போரும் முன்வந்து எழுதிக்கொண்டுதான் இருக்கின்றனர்.காரணம் எழுத்தின் மீதுள்ள ஆர்வம்,தனக்குத் தெரிந்ததை,கற்பனைகளை,கருத்துக்களை பகிர்தலில் ஆர்வம்,தன் எழுத்தின் மூலம் தன்னை நிலைநிறுத்துதலில் ஆர்வம்,கிடைக்கும் நேரத்தை பதிவுகளை படிப்பதற்கும்,எழுதுவதற்கும் செலவளிக்கும் ஆர்வம் போன்றவைகள் அவரவர் திறன்களுக்கேற்ப வெளிப்படுகிறது.


பள்ளி,கல்லூரியில் படிக்கும்போது சில புரியாத,தெரியாத பாடங்களை தெரிந்தவர்களிடம் கேக்க நேரும்போது வேணுமென்றே சொல்லிக்கொடுக்காமல் அல்லது தெரிந்தாலும் எனக்குத் தெரியாதுன்னு சொன்ன நபர்கள் உண்டு.பணி செய்த இடத்தில் டெக்னிக்கலான விசயங்களை அவ்வளவு எளிதில் யாரும் யாருக்கும் உடனே கற்றுத் தந்துவிட மாட்டார்கள்.வசிக்கும் பகுதிகளில் சமையல் சந்தேகங்கள் அல்லது கைவினைப் பொருட்கள் செய்ய கற்றுக்கொடுங்கள் என்றபோது உடனே யாரும் முன்வந்திடவில்லை.இதுவரை பழகியதை மறந்து,முகதாட்சண்யம் பாக்காமல் ”எனக்குத் தெரியாது” அல்லது மலுப்பல் பதில்களை கேட்டிருக்கிறேன்.இதைவிட மோசமாக ஒரு பெண் வேணுமென்றே தவறாக சொல்லிக்கொடுத்துருக்கிறார்.இப்படிப்பட்டவர்கள் அதீத திறமைசாலிகளாக எனக்குத் தெரிவார்கள்.


தனக்கென பணி,குடும்பம் இருந்தாலும் நேரம் ஒதுக்கி பொது விசயங்கள்,தமிழ் புலமை மட்டுமின்றி கணினி மற்றும் பிற துறைகள் சம்பந்தமான டெக்னிக்கல் பதிவுகளை எத்தனைபேர் பதிவு செய்கிறார்கள்.தனக்குத் தெரிந்த சமையல் கலைகள்,கைவினைப் பொருட்களின் செய்முறைகள்,மருத்துவக் குறிப்புகள்,பல துறைகள் சார்பான பதிவுகள்,ஆலோசனைகள் எத்தனை பேர் பகிர்ந்துகொள்கின்றனர்.அவர்களுக்கெல்லாம் கூகிளார் சம்பளமா தருகிறார்.தனது வலைதளத்தில் பிரச்சனை,டெக்னிக்கலான சந்தேகம், என்றால் முகம் தெரியாத சக பதிவர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவுவதையும்,வலைதள நட்பு சொந்த கஷ்டகாலத்தில் உதவுவதையும்  இங்குதான் பார்த்தேன்.


இப்படி ஒருபுறமிருக்க சிறுபிள்ளைத்தனமாக போட்டி பொறாமையில் பதிவிடுவது,மற்றவர் பதிவின் கருத்துக்களை தனது பெயரில் வெளியிடுவது(காப்பியடிப்பது),அவதூறு பதிவுகள்,பின்னூட்டங்கள்,சென்சார்  செய்ய ஆளில்லையா,ஒருவரும் எதிர்க்கவில்லயே,தன்னை விசித்திர சிந்தனைவாதியா காட்டிக்கிற பின்னூட்டவாதிகள்,பதிவர்கள், இதெல்லாம் படிக்கமாட்டாங்களா,எங்க போனாங்க அவங்களெல்லாம்  போன்றவைகளையும் சுற்றிக் காட்டுகிறது பதிவுலகம். அவரவர் விருப்பத்திற்கு, திறனுக்கேற்றார் போல பதிவுலகி்ல் உலாவுகிறோம்.


பொதுவாக வலைதளம் அதுவும் தமிழில் வைத்திருப்போருக்கு வெட்டி ஆசாமிகள் என்ற முத்திரையும் உண்டு.யாரும் கோபிக்க வேண்டாம்.கேள்விப்பட்டதை சொன்னேன்.போனாபோவுதுன்னு பின்னூட்டமிடுபவர்களையும் பின்னூட்டமிட்ட பாவத்துக்கு இதே போல பல வெட்டிகள் இருக்காங்கன்னு சிலர் கிண்டலடிக்கிறாங்கப்பா.!


சராசரியான குடும்ப வாழ்க்கை கொண்ட நான் வலைதளம் வைத்து பதிவுகள் வெளியிடுவதே எனக்கு பெரியவிசியம். கடந்த  வருடதில்  2011 அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 9ஆம் தேதிவரை வலைச்சர ஆசிரியாராகும் வாய்ப்பு கிடைத்திருந்ததில் என்னைவிட என் கணவருக்கு ஆச்சர்யம் (என் சுய விபரம் அவருக்குத்தானே தெரியும்).உன்னால் முடிந்தவரை நல்லபடியாக செய் என்று ஊக்கம் தந்தார்.இணையமும்,பதிவுகள் எழுதுவதும் உனக்கும்,குடும்ப வாழ்விற்கும் இடையூராகிவிடக் கூடாது,நல்ல வழியில்  உனது நேரத்தினை செலவிடுவதிலும்,அறிவுசார் விசயங்களை தெரிந்துகொள்வதிலும் என் எதிர்ப்பு இருக்காது என்பார் எனது கணவர்.அவருக்கு என்றென்றும் எனது நன்றிகள்.

 என் பதிவுகளை படிப்போருக்கும்,நிறை குறைகளை தெரிவிப்போருக்கும்,வாக்குகள் அளிப்போருக்கும்,ஊக்கம் தருபவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.நேரமிருக்கும்போது  தரமான பதிவுகளை வெளியிட முயல்வதோடு,மற்றவர் பதிவுகளையும் படிக்கவும் விரும்புகிறேன்.

Jan 2, 2012

மார்கழி மாதமும், காலத்தின் கோலமும்

சேனல்களை மாற்றினாலும் மனம் ஒருநிலைப்படாததால்,என் மனசுக்குதான் ஒரு ரிமோட் இல்லாமபோயிட்டு போ என்று ரிமோட்டை எரிச்சலுடன்  அழுத்தி  டீவீயை  ஆஃப் செய்துவிட்டு அடுப்படிக்கு சென்றாள் மஞ்சு.அடுப்பங்கறையிலும் என்ன செய்வதென்று புரியவில்லை.மஞ்சுவின் பார்வையில் மதியம் சமைத்த,சாப்பிட்ட பாத்திரங்கள் ”என்னை விளக்கு, துளக்குனு” சத்தம்போடுவதுபோல  இருந்ததால் அடுப்பங்கறையிலிருந்தும்   வெளியே  வந்துவிட்டாள்.

வீட்டிற்குள் யார் இருந்தாலும்,என்ன சொன்னாலும்,செய்தாலும் எதையும் பொருட்படுத்தாமல் தான் உண்டு,தன் வேலை உண்டுனு இருக்கும்னு கடிகாரத்தை பார்த்தாள்.நேரம் நாலரையானது.அப்பா எப்படியோ இவ்ளோ நேரத்தை கடந்துட்டேன்னு கடிகாரத்தைப் பார்த்து பெருமூச்சுடன் புன்னகைத்தாள்.பதிலுக்கு கடிகாரமும் அடுத்த நொடிக்கு நகர்ந்தபடி புன்னகைத்தது போலிருந்தது மஞ்சுவிற்கு.திருமணத்திற்கு பின் கணவனை விட அதிக நேரம்   மஞ்சுவுடன் இருப்பதும்,ஓயாமல் சுற்றி,இதோ வந்துடுவார்,இதோ வந்துடுவார்னு கணவன் வரும் நேரத்தை காட்டுவதும்  கடிகாரம்தான்.

மொபைல் ஒலித்தது.ஹோ! மொபைல எங்க வச்சேன்,யாரோ ஃபோன் பன்றாங்களேனு சத்தம் வரும் இடத்தை கண்டுபிடித்து  ஓடிப்போய்  எடுத்தாள்.அம்மா காலிங் என்பதை பார்த்தவுடன் அதீத புத்துணர்வுடன் அம்மாவுடன் பேசத்துவங்கினாள்.நலம் விசாரிப்புகள் முடிந்ததும் ஒரே போரடிக்குதும்மா எதுலையும் மனசு ஒன்றமாட்டேங்கிறது என்றாள் மஞ்சு.உனக்குனு ஒரு குழந்தை வந்துட்டுனா சரியாகிடும்னு அம்மா சொன்னதும் ”அம்மா” என்று தீர்க்கமாக குரல் கொடுத்தாள் மஞ்சு.

சரி மஞ்சு, ஒரு விசயம் ஞாபகப்படுத்ததான் ஃபோன் செய்தேன்,நாளைக்குதான் மார்கழி பிறக்குது.போன மார்கழியில் எங்களோட இருந்த,நான் வேண்டின தெய்வங்கள்  உனக்கு நல்ல வாழ்க்கைய அமைச்சு கொடுத்துருக்கு,இந்த மார்கழிக்கு உன் கணவன் வீட்டில் இருந்தாலும் நம்ம வீட்லமாதிரியே காலையில் எழுந்து குளிச்சிட்டு,சாமி படத்துக்கிட்டயும்,வாசலிலும் விளக்கேத்திவச்சுடு,கலர் மாவு கிடச்சதுன்னா கலர் கோலம் போடு..என்றதும் கொஞ்சலும்,டென்சனுமாய் “அம்மா நீ வேற ஏம்மா என்னை டென்சனாக்குற, க்வாட்ரசில்  ரெண்டு  ஆள்  சேர்ந்தாப்ல நிக்கமுடியாத வாசல், அதுவும் இரண்டாம் மாடியில் இருக்கேன் .கல்யாணம் ஆகி வந்தப்பவே ஆசையா கோலம்மாவ கண்டுபிடித்து வாங்கி இந்த சின்ன வாசலில் சின்ன கோலம் போட்டதற்கே என் வீட்டு வாசல் வழியா போற பக்கத்து வீட்டுக்காரங்களெல்லாம் செய்யக்கூடாத குத்தம் செஞ்சிட்ட மாதிரி பார்த்தாங்க,சாக்பீஸ்ல கோலம்  போடுங்க,கோல ஸ்டிக்கர் வாங்கி ஒட்டிவைங்கனு உலக அட்வைஸ் கொடுத்தாங்க.அன்னைக்கே கோலம் போடுற ஆசையே விட்டுப்போச்சுன்னு சொன்னேன்ல,கலர் கோலத்த ஞாபகபடுத்தி வெறுப்பேத்திறியேம்மா”

சரி மஞ்சு உனக்கு அங்க தோது எப்படியோ அப்படி செய்ம்மா.சாஸ்த்திர சம்பிராதயங்கள மறந்திடாதம்மா,உன் வீட்டுக்காரரையும் நீதான் பாத்துக்கனும்,சந்தோசமா இருக்கனும்மா,அனுசரிச்சு நடந்துக்கோம்மா சரி வச்சிடுறேம்மான்னு ஃபோனை வைக்க மனசில்லாமல் இருவரும் பேசி முடித்தனர். தன் பெற்றோருடன் வாழ்ந்த மார்கழி மாதங்களின் நினைவுகளை நினைத்து தனக்குத்தானே ரசித்துக்கொண்டிருந்தவளை வாசலின் அழைப்பு மணியோசை தடுத்தது.கடிகாரத்தைப் பார்த்தாள் ஆறேகால்.ஹை... கணவராதானிருக்கும்னு ஆசையாய் ஓடினாள்.


கதவைத் திறந்தவுடன் “ஹ்ம்!.....  மஞ்சு இன்னைக்கு பொழுது எப்படி போனுச்சு,எனிதிங் ப்ராப்ளம்னு” கேட்டவர் மஞ்சுவின் கணவர்தான்.அதெல்லாம் ஒன்னுமில்ல,உள்ள வாங்கன்னு அன்பாய் வரவேற்று அவளும்  அந்த வீட்டிற்குள் புதிதாய்  நுழைவது போல உணர்ந்தாள்.இனி  கண்டுக்கவே மாட்டாள்னு கடிகார முட்கள் புலம்பியபடி சுற்றின.ஒரு   டீ எடுத்துட்டு வரவா? ஸ்நாகஸ் எடுத்துட்டு வரவா என்றாள் மஞ்சு.ஒரு கப் டீ போதுமென பதில் வந்ததும்  அதே அடுப்படிக்கு பறந்து செல்லாத குறையாக சென்று இரண்டு கப் டீ ரெடி செய்தாள்.விளக்கி கழுவ வேண்டிய பாத்திரங்கள் எதுவும் அவள் கண்களுக்குத் தெரியவில்லை.


ஃப்ரஷ் ஆகிட்டு கணினி முன் அமர்ந்திருந்த கணவரிடம் டீ எடுத்துக்கங்க என்று சொல்லி தானும் அருகே அமர்ந்து டீயை பருகியபடி உங்களுக்கு இன்னைக்கு ஆபிசில் வேலையெல்லாம் நல்லபடியா நடந்துச்சா என்றாள்.அஸ்யூஸ்வல் என்றார் மஞ்சுவின் கணவர்.நாளைக்கு மார்கழி
மாதம் பிறக்குதுங்க,என் அம்மா ஃபோனில் பேசினாங்க,அம்மாவும் சொன்னாங்க.தென்,வேறென்ன விசேசம் என்றார் மஞ்சுவின் கணவர்.என்னங்க இப்படி சொல்றீங்க.மார்கழி பிறந்தால் எவ்ளோ ஜாலியா இருப்பேன் தெரியுமா!ஊதக்காற்றிலும்,குளிரிலும் விடியகாலையில் கோலம் போடுறதே தனி சந்தோசம்.

அப்ப கோலம் போடுவதில் வித்தகின்னு சொல்லு,மார்கழி மாத குளிரில் நல்லா தூங்கதான் எனக்கு பிடிக்கும் என்றார் மஞ்சுவின் கணவர்.என்னையவிட என் அம்மாதான் சூப்பரா கோலம் போடுவாங்க,எனக்கு கலர் அடித்து கோலத்தை அலங்கரிப்பதுதான் ரொம்ப பிடிக்கும்.கலர் மாவை டப்பாக்களில் சேகரித்து வச்சிருப்பேன்,கடை கடையா போய் கலர் பொடி வாங்குவேன்,எங்க தெருவில் வரும்  கலர் பொடி விற்பவரையும் விடமாட்டேன்.இல்லாத மற்றும் வித்தியாசமான கலர்களை வாங்கிப்பேன்.

கலர் மாவுடன் வெளைக் கோலமாவை கலந்து அடித்தாலும் நல்லாருக்கும்.  அப்படியே அடித்தாலும் நேச்சுரலா இருக்கும்.கோலத்திற்கு கலர் கொடுப்பதிலும்,கலர் காம்பினேசன் கொடுப்பதிலும்,பிறகு வெளிக்கோடு கொடுப்பதிலும் எவ்ளோ டெக்னிக் இருக்குத் தெரியுமா?எங்க தெருவில் யாரு சீக்கிரம் எழுந்து கோலம் போடுறாங்கன்னு போட்டி போட்டு கோலம் போடுவோம்.கோலத்த போட்டு கலர் கொடுத்திட்டு அக்கம்பக்கத்து வீட்டு கோலத்தை போய் பாத்திட்டு யாரோட கோலம் நல்லாருக்குன்னு வாக்கு வாதம் செய்வோம்.

பள்ளி படிக்கும்போது கூட படிக்கிறவங்க சொல்றத கேட்டு நானும் செங்ககல்லை அறைத்து அதை ஒரு கலரா வச்சுக்குவேன், ஃபில்ட்டர் காப்பித்தூளை உலர்த்தி அதையும் ஒரு கலரா போடுவேன்.நாளைக்கு என்ன கோலம்,கலர் என்னென்ன கொடுக்கலாமென  முதல் நாளே முடிவு செய்திடுவோம்.பக்கத்து வீட்டிற்கு கூட நாளை போடப்போகும் கோலத்தை தெரியாமா ரகசியமா வச்சுக்குவோம்.பூசனி,அல்லது பரங்கிப் பூவை கோலத்தின் நடுவே வைப்போம் பாருங்க,அது தனி அழகு.ஆனா பொழுது விடிந்ததும் ரோட்டில ஆடு,மாடு போனுச்சுனா அந்த பூவை தின்னுட்டு போய்டும்.

எங்க வீட்டுக்கு பக்கத்தில கோவில்,குளம் இருக்குல்ல,கோவில்ல திருவெம்பாவை,திருப்பாவை பாட்டு போடுவாங்க,அந்த பக்கம் உள்ள மாரியம்மன் கோவில்ல பாட்டு கேக்கும்,அந்த பாட்டுக்களை கேட்டுகிட்டே,அம்மா வாசலில் ஏற்றி வச்சிருக்கும்,விளக்கு,அகர்பத்தி வாசனை,காலங்காத்தால அய்யப்ப சாமிக்கு மாலை போட்டவங்களெல்லாம் குளத்திற்கு,குளிக்க போவாங்க,படிதுறையிலிருந்து  குளிரில் சாமியோ,அய்யப்போன்னு சொல்லிக்கிட்டு வருவதும்,அவர்களின்  சந்தன வாசனையும் மணக்க,மணக்க கலர் கொடுப்போம்.ரோட்ல போறவங்க,வர்றவங்க எங்க வீட்டு கோலத்தை எப்படி பாக்குறாங்க,மிதிக்காம போறாங்களான்னு பள்ளி,கல்லூரி போகும் வரை அப்பப்ப வாசலில் வந்து வந்து பாப்பேன்.

சைக்களில்,பைக்கில் போறவங்க நாம நின்னா கோலத்தில் ஏத்தாம போவாங்க.ஆனா சில நல்லவங்க ஆள் இருந்தாலும்,இல்லன்னாலும் கோலத்தை வீணாக்காம ஒதுங்கி போவாங்க.சாய்ங்காலம் நான் வரும் வரை வாசலை பெருக்கிடாதம்மான்னு சொல்லிட்டு போவேன்.எங்க தெருவில் மட்டுமில்லாம பள்ளி,கல்லூரி போகும்போது மற்ற வீடுகளிலும் என்னென்ன கோலம்,எப்படி கலர் கொடுத்திருக்காங்கன்னு பாத்துக்கிட்டே போவேன்.ஃபிரண்ட்ஸ்ங்களுடனும் காலையில் அவங்கவங்க போட்ட கோலத்தபத்திதான் முதல்ல பேசுவோம்.அன்றைய கோலம் அன்றே மறைந்துபோவதில் எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கும்னு பட,படன்னு சொல்லி முடித்தாள் மஞ்சு.

நானும் கோலங்களை பாத்திருக்கேன்,ஆனா இவ்ளோ விசியம்,அதுவும் நீ இத்தனை ஆர்வம்மா இருப்பன்னு இப்பதான் தெரிஞ்சுகிட்டேன் மஞ்சு.ஆனா இப்போ நீ நம்ம வீட்டு வாசலில் எட்டு புள்ளிலகூட கோலம் போட முடியாதே,சரி பரவாயில்ல நாளையிலிருந்து சின்ன,சின்ன கோலம்,பூ வரைந்து கலர் கொடுத்துவை.நீ போடும் கோலம் அழியாமல் நான் ஃபோட்டோ எடுத்து வச்சுடறேன் என்றார் மஞ்சுவின் கணவர்.மஞ்சுவிற்கு ஆனந்தம் உச்சிக்கு போனது.ஆனால் வருத்தமுடன் கலர் பொடி இல்லைங்க என்றாள்.ஓகே ரெடியாகு,கடெத்தெரு போய் கலர் பொடி எங்கு கிடக்கும்னு விசாரிச்சு உனக்கு பிடித்த கலர்களை வாங்கிட்டு வந்திடலாம்னு கணவர் சொன்னதும் உடனே தயாரானாள் மஞ்சு.பத்து கலர்,கலர் மாவு வைக்க டப்பாக்களுடன் வந்தனர்.வந்தும் ஆர்வமுடன் டப்பாக்களில் போட்டு,இடுவதற்கு சிறிய  துணிகளை ரெடி செய்து அனைத்து கலர் டப்பாக்களுக்கும் கொண்டை போட்டது போல வைத்தாள்.

அன்று இரவு மஞ்சுவிற்கு கை,கால் புரியவில்லை.நாளை என்ன கோலம் போடலாம்,கலர் கொடுக்கலாம்னு நினத்துக்கொண்டே வேலைகளை சுறுசுறுப்பாக முடித்தாள்.வாசலை போய் பார்ப்பதும் உள்ளே வருவதுமாக இருந்தாள்.இந்த சின்ன வாசலில் சின்ன கோலம் போட்டாலும் பாக்கிறவங்க எல்லோரும் சூப்பரா இருக்குன்னு சொல்லனும்னு நினைத்துக்கொண்டாள்.நாலரைக்கு அலாரம் வைத்துவிட்டு படுத்தவளுக்கு தூக்கமே வரவில்லை.திடீர்னு விழித்துப் பார்த்தாள்.ஓ! தூங்கிட்டேன்னா, அப்பா இன்னும் நாலரை ஆகல.சே இந்த கடிகாரம் நமக்கு வேணுங்கும்போது ஓடாதுன்னு புலம்பிகிட்டே மூன்று மணிக்கெல்லாம் எழுந்தவள் காலை வேலைகளை துவங்கினாள்.குளித்துவிட்டு வந்து விளக்கேற்றினாள்.


சிமெண்ட் தரையான சின்ன வாசலை ஈரத்துணியால் தேய்த்து,தேய்த்து சுத்தம் செய்தாள்.அலாரம் அடித்தபின் நிறுத்திவிட்டு கோல மாவு மற்றும் கலர் மாவுக்களை சீர்வரிசை எடுத்து வருவது போல எடுத்து வந்து, ஆலோசித்து வைத்திருந்த ஒரு ரோஜா,இருபக்கமும் அதைவிட குட்டி ரோஜாப்பூவை வரைந்து மூன்று ரோஜாக்களையும் ஒரே வட்டத்திற்குள்  இருப்பதாய்   சுற்றிலும் அலங்கரித்தாள்.பூக்கள் சிறியதாய் இருந்தாலும் பெரிய ரோஜா சிவப்பு கலரும்,இரு பக்க குட்டி ரோஜாக்களுக்கு ரோஸ் கலரும் மெகந்தி டிசைன் போன்ற வட்ட வடிவிற்கு மற்ற வண்ணங்களும் பிரிண்ட் போட்டது போல அழகாய் மிளிர்ந்தது கோலம்.

கணவனை எழுப்பி கோலத்தை பார்க்க சொல்லனும்,தன் வீட்டுக்கு ஃபோன் பன்னனும்னு யோசித்துக்கொண்டே கலர் சீர் வரிசைகளை பத்திரமாக வீட்டிற்குள் எடுத்துச்சென்றாள்.வாசலில் காலடி சப்தம் கேட்டு அவசரமாக ஓடிப்போய் பார்த்தாள்.பக்கத்து வீட்டு அன்கிள்  தன் கால் செருப்பில் கோலம்  ஒட்டிவிட்டதை முகம் சுழித்து  பார்த்துக்கொண்டிருந்தார். இடிந்து போன மஞ்சு அன்கிள் என்றதும்,வாக்கிங் போக கிளம்பினேன்,சாரி மஞ்சு நான் கவனிக்கல, என்று நடந்து போனவர் சில அடிகள் மிதித்த பிரிண்டை வலது  பக்கத்து வீடு வரை இட்டுச்சென்றார்.

லேசாக அழிந்திருந்த இடத்தை  மீண்டும் நிரப்புவோமா என்று நிலையோடு நிலையாக நின்று மஞ்சு யோசித்துக்கொண்டிருக்கையில் இடது புற மூன்றாவது வீட்டிலிருந்து சைக்களை தள்ளிகிட்டு  ட்யூசனக்கு புறப்பட்ட  ஜனனி ,ஹை சூப்பரா இருக்குக்கா ரெங்கோலி என்றாள்.மஞ்சுவிற்கு இப்பதான் தெளிவே வந்தது.மஞ்சு அக்கா இப்ப நான் சைக்களுடன் எப்படி ஓரமா போறது என்றதும் மஞ்சுவிற்கு நெஞ்சடைத்துவிட்டது.ஜனனி உன் சைக்களை நானே இந்தப் பக்கம் எடுத்து வச்சுடறேன்,நீ ஓரமா தாண்டிப் போம்மா என்றாள்.பத்திரமாக கோலத்தைக் காப்பாற்றி சைக்களை இந்தப் பக்கம் இழுத்து,எடுத்து வைத்தாள் மஞ்சு.ஓரமாகத் தாண்டினாலும் ஆறாவது படிக்கும் ஜனனியின் கால் மூன்றாவது குட்டி ரோஜாவின் காம்பினை சுத்தமாக அழித்துவிட்டது.மஞ்சுவிற்கு துக்கம் தொண்டையில் அடைத்தது,ஜனனியும் சாரி சொல்லிவிட்டு சைக்களுடன் புறப்பட்டாள்.

மீண்டும் கலர் மாவை எடுக்க போனவளை மஞ்சு... என்று கூப்பிடும் குரல் கேட்டு வாசலுக்கு வந்தாள் மஞ்சு.பக்கத்து வீட்டு ஆன்ட்டிதான் கூப்பிட்டுள்ளார்.மஞ்சுவிற்கு மேலும் ஒரு அதிர்ச்சி.அவள் ஆசை,ஆசையாய் வரைந்திருந்த சிவப்பு ரோஜாவை சிதைத்தபடி செய்தித்தாள் சுருள் கிடந்தது. நியூஸ் பேப்பர் எடுக்க வந்தேன் மஞ்சு,அந்த கடங்காரந்தான் கீழிருந்தபடி விட்டெறிவானே,பேப்பர தூக்கிப்போட்டு உன் கோலத்தை வீணடிச்சிட்டான்பாரு,நீ இங்க குடித்தனம் வந்து கோலம் போட்டபோதே சொன்னேன்ல பெயிண்ட்ல கோலம் போடு,இல்லைன்னா ஸ்டிக்கர் கோலத்தை ஒட்டிவைன்னு சொல்லியிருக்கேன்ல என்றார் ஆன்ட்டி.

வாசலை சுத்தம் செய்ய வந்த வலதுபுற பக்கத்து வீட்டு பெண்மணி வேதனையுடன் நின்ற மஞ்சுவை  ,என்ன மஞ்சு எங்க வீட்டுக்கும் சேத்து கோலம் போட்ருவ போலருக்கு,உன் கோலத்தை மிதிச்சவங்க என் வீட்டு வாசல் வரை தடவிட்டு போய்ருக்காங்க போலருக்கு,இனி எல்லோரும் ட்யூட்டிக்கு கிளம்புற நேரம்,உனக்காக உன் வீட்டு வாசலில் குதிச்சு,குதிச்சு போவாங்களா?,அப்படி போகலைன்னா இன்னைக்கு முழுதும் நானும் வாசலை தொடைச்சிகிட்டே இருக்கனும் போலருக்கே என்றார்.

அதற்கு மேல் மஞ்சுவால் தாங்க முடியவில்லை.மேலும் மற்றவர்கள் தன் கோலத்தினை கலைப்பதைவிட,காலத்தின் கோலத்தினை மனதில் கொண்டு ஆசையாக வரைந்த கோலத்தை ஈரத்துணியால் துடைத்தெடுத்தாள்.
**************************************************************** முற்று.*********

இந்த கதை 31/12/2011 அன்று அதீதம் மின்னிதழில் வெளிவந்துள்ளது.

இந்த கதையை மின்னிதழில் வெளியிட  வழிமுறைகள் தெரியாது.
மின்னிதழில் வெளியிட உதவிய சகோதரருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.