*வணக்கம் வருகைக்கு நன்றி*

Nov 21, 2011

மழலைகள் உலகம் மகத்தானது

மழலைகள் உலகம் மகத்தானது என்ற தொடர் பதிவிற்கு  திருமதி.இராஜராஜேஸ்வரி அவர்கள் அழைத்ததனை அன்புடன் ஏற்று இந்த பதிவினை தொடங்குகிறேன்.தற்சமயம் இந்த வாய்ப்பு கிடைத்தமையில் கூடுதலாக மகிழ்கிறேன்.
                


ஜவர்ஹலால் நேரு அவர்களின் பிறந்தாநாள் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்பட்டாலும் அங்காங்கு குழந்தைகள் தினம் கொண்டாடினாலும்,குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்தாலும் குழந்தைகளாக இருக்கும்போது அந்த தினத்தின் விபரங்கள் புரிவதில்லை.எதோ வாழ்த்து  சொல்கிறார்காள்,கொண்டாடுகிறார்கள் என்பது மட்டுமே அவர்களுக்கு புரியும்.  குழந்தை பருவத்தை கடந்திருக்கும்  தருணத்தில்தான் இந்த
தினத்தின் விபரங்கள் புரியவருகிறது  என்பது என் கருத்து .         


                     
பெரும்பாலான பள்ளிகளில் குழந்தைகள் தினம் என்பது விடுமுறை நாட்களில் ஒரு நாளாகிறது.பல பள்ளிகளி்லும்,எதாவது பொதுச்சேவை நிலையங்கள்,நிறுவனங்கள்,ஏதோ ஓரிடத்தில்  குழந்தைகள் தினம் சாதரணமாகவோ கலைநிகழ்ச்சிகளுடனோ கொண்டாடப்படும் பகுதியில் நிச்சயம் ஒரு இடத்தில் என்றுமே குப்பை பொறுக்கும் பிள்ளையோ,கடைகளில் வேலை பார்க்கும் பிள்ளையோ,வீட்டு வேலை பார்க்கும் பிள்ளைகள் இப்படியொன்று எங்கோ நடைபெறுவது தெரியாமல் அவர்களின் வயிற்று பிழைப்பிற்கான வேலைகளை அன்றும்  பார்த்துக்கொண்டிருப்பார்கள்.நான் குழந்தைகள் தினத்திற்கு எதிரி இல்லை.இரு பக்கமும் வேடிக்கை பார்க்கும் சராசரி.
 

குழந்தை பிறந்தவுடன் பெற்றவருக்கும் குழந்தை மீது அன்பு கொண்டோருக்கும் தினம் தினம் கொண்டாட்டம்தான்.அன்றாட வாழ்வின் இயல்பில் தினம் தினம் கொண்டாட்டம் என்பது பல வடிவங்கள் பெறும்,அதில் குழந்தையின் மீதான அன்பின் வெளிப்பாடும் அரவணைப்பும் தாயிடம் மட்டுமே தனித்துவமாக பளிச்சிடும்.நான் சொல்வது அடிப்படைத் தேவைகள் நிரம்பிய குடும்பத்தின் குழந்தைகளுக்கு மட்டுமே.அடிப்படைத் தேவைகள் இல்லாத குடும்பத்தில் குழந்தை பிறந்துவிட்டால் பேணி வளர்ப்போரின் பாடு திண்டாட்டமாவது பரிதாபம்.ஆனால் அங்கும் தாயின் அன்பும் அரவணைப்பும் பளிச்சிடும்.


குழந்தை மட்டும் பிறந்து வளர்வதில்லை.கருவிற்கு காரணமானவர்களுக்கு தாய் தந்ததையாக ப்ரமோசன்,இவர்களது உறவுகளுக்கும் தாத்தா,பாட்டி,மாமா,சித்தி இப்படியான ப்ரமோசன் மட்டுமல்ல நீங்கள் எவ்வளவு பெரிய படிப்பாளியாகவும். சிந்தனைவாதியாகவும், பக்குவப்பட்டவர்களாக   இருந்தாலும் ஒரு குழந்தை பேச ஆரம்பிக்கும்போதும்,யோசிக்க ஆரம்பிக்கும்போதும் கேள்விகள் கேக்கும்போதும் இதுவரை யாரும் சொல்லித்தராத,அறிந்திராத பாடங்களை செல்லமாக கற்க முடியும்.


குழந்தைப் பருவம்வரை யார் அன்புகாட்டுகிறார்களோ,யாருடன் வளர்கிறார்களோ அவர்கள்தான் அந்த குழந்தைக்கு அடிப்படை முன்னோடியாக இருப்பார்கள்.குழந்தை பருவத்தைக் கடந்து  வீட்டாரைத் தவிர  ஊரையும்  உலகத்தையும் புரிந்துகொள்ள முயற்சிக்கும்போதும், சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் மாறுபடும்போதும் அவர்களின் முன்னோடிகளும் மாறுபடலாம். எனினும் அடிப்படை முன்னோடிகளைப் பொருத்தே வருங்கால முன்னோடிகளை தேர்ந்தெடுப்பார்கள் பிள்ளைகள்.


காதல் கண்ணாடி போன்றது.நாம் எப்படி இருக்கிறமோ அப்படிதான் கண்ணாடி பிரதிபலிக்கும் என்று எங்கோ படித்துள்ளேன்.கண்ணாடியை எப்படிலாம் கவனத்தில் கொள்கிறமோ கையாள்கிறோமோ அந்தளவிற்குதான் காதலும்.கவனக்குறைவாலும்,முறையற்ற கையாளும் திறனாலும்   கண்ணாடிக்கு கீறல் விழலாம்,பிரதிபலிக்காமலும் போகலாம்.சுக்கு நூறாக உடைந்தும் போகலாம்.இந்த உதாரணம் குழந்தைக்கும் பொருத்தமானதென்று நினைக்கிறேன்.


என் கவனத்தில் உள்ள சில பெற்றோர்களை மனதில் கொண்டு
கண்ணாடி = குழந்தை
உதாரணத்தை வேறு விதமாகவும் சொல்ல விரும்புகிறேன்.


அதீத ஆர்வத்தில் அதிக கவனத்தினாலும் கண்ணாடிக்கு கீறல் விழலாம்,பிரதிபலிக்காமலும் போகலாம்.கண்ணாடி குழந்தையாக இருக்கும்பட்சத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.


இளம் வயதில் சிக்கலான சூழ்நிலையில், ஒரு விசியத்திற்காக சக வயதுடையோர் யோசிப்பதும்,முடிவெடுப்பதும்  ஒன்றாகத்தானிருக்கும்.அதே விசியத்தில் நம்மைவிட வயது  மூத்தோரின்  அனுகுமுறையில், வித்தியாசம் அதிகமாகத்தானிருக்கும் என்று ஒரு சகோதரி எனக்கு அறிவுரைத்திருக்கிறார்.


இந்த உதாரணத்தை குழந்தைகளுக்கு பொருத்தினால்


இப்படியும்
நடந்திடமால்
நாம்தான்
பாத்துக்கனும்
2 வயது குழந்தை,மற்றொரு 2 வயது குழந்தையுடன் விளையாடும்போது பெரிதாக மாற்றங்களை பார்க்க முடியாது.அதே 2 வயது குழந்தை,3 அல்லது 4 வயது குழந்தையுடன் விளையாடும்போது அதன் சிந்திக்கும் திறனில்,பழக்க வழக்கங்களில் நிச்சயம் மாற்றங்கள் இருக்கும்.வயதில் மூத்த குழந்தைக்கும் நாந்தான் இந்த வாண்டுக்கு தலைமை(பாஸ்) அல்லது வழிகாட்டி அல்லது நாந்தான் பாத்துக்கணும்,அல்லது என் அரவணைப்பிற்குறிய குழந்தை இப்படி தன்னை நிலைநிறுத்தும் பழக்கம் வரலாம்.இதற்கு நமது வழிகாட்டலும் அவசியம்.

சிறு சுயபுராணம்:


குழந்தைகளை தேவையில்லாமல் திட்டுபவர்களை,அடிப்பவர்களை பார்த்தபோது,ச்சே குழந்தையிடம் கனிவு காட்டாமல் இப்படி நடந்துகொள்கிறார்களே,இந்த இடத்தில் நானிருந்திருந்தால் அந்த குழந்தைக்கு புரிய வைத்திருப்பேன்,அன்பு காட்டியிருப்பேன் என்று நினைத்ததுண்டு.அதே சமயம் என் தோழி ஒருவர் சொல்வார்,சிரித்து மகிழ்வதும்,சொல்வதைக் கேப்பதும்தான் குழந்தை.பிடிவாதம் பிடிக்கும் குழந்தை,கட்டுப்படுத்தமுடியாமல் அழும் குழந்தைகளை பளாரென்று அரைந்திடனும் என்பார்.கனிவு காட்டல் சரிபட்டு வராது என்பார்.


எனக்கென்று குழந்தை பிறந்தபோது ,குழந்தை குறும்புகள் செய்யும் சில நேரங்களில் பொருமை இழந்துவிடுவேன்,அன்று நினைத்தது நடைமுறைக்கு ஒத்துவராது போலிருக்கே என்று நினைத்ததுண்டு.


அதே தோழிக்கு குழந்தை பிறந்து வளர்ந்த நிலையில் ஓரிரு முறையே அவர் மகள் செய்யும் சேட்டைகளை பார்த்தபோது என் குழந்தை பரவாயில்லை போலருக்கேனு நினைக்க வைத்தது.மற்றபடி ஃபோனில் குழந்தை பற்றி பேசும்போதும் அன்று அப்படி பேசிய தோழி தன் மகளை தங்கத் தட்டில் வைத்து தாங்காத குறைதான்.மறந்து கூட தன் மகளை கடிந்துகொள்வதில்லை.மகளை கவனிப்பதிலும்,புரியவைப்பதிலும் இவ்வளவு பொறுமையும் பக்குவமும் என் தோழிக்கு எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை.





நான் மகளை கவனிக்காமல் இருக்கும் நேரத்தில் மகளின் கவனக்குறைவால் பல பொருட்களை உடைத்துவிடுவாள்.வீணாக்கிவிடுவாள்.கண்டிப்பும்,புரியவைத்தலும் பொறுமையிழந்து சில நேரத்தில் அடித்துவிடுவேன்.பிறகு இருவரும் சமாதாணம் ஆகிவிடுவோம்.சமீபத்தில் என்னிடம் சாத்துபடி வாங்கிய மகள் அழுகையை அடக்கிக்கொண்டு பாவமாக பார்த்தில் மனமுருகி மேலும் அடிக்காமல் போய்விட்டேன்.

சில மணி நேரத்திற்கு பிறகு இனி இப்படிலாம் செய்யாத,தங்க பிள்ளைய அம்மா அடிச்சிடேன்,பிள்ள பாவம்னு அருகில் அழைத்து சொல்லிக்கொண்டிருக்கிறேன்,நான் எதிர்பார்க்காத வகையில் “பரவாயில்லம்மா,இனிமே இப்படி செய்யமாட்டேன் நீ அழறியான்னு” என்னை கேட்டாளே!என்னை பவ்யமாக பார்த்தாளே!என் மகளின் மன வளர்ச்சியை என்னால் நம்ப முடியவில்லை,என்னை யாரோ பளார்,பளார்ன்னு அறைந்தது போலாயிற்று.

கற்றுக் கொள்வதிலும்,கவனிப்பதிலும் நம்மைவிட குழந்தைகளுக்கு சக்தி அதிகமுண்டு. மழலைகள் உலகம் மகத்தானது என்பதில் மாற்று இல்லை.மகத்தானவர்களாகவும்,மற்ற வகையினராகவும் மாற்றுவதிலும் வழிநடத்துவதிலும் நமக்கு முழு பொறுப்பு உண்டு.

மேலும் மகத்தான தகவல்களுடன் இந்த தொடர் பதிவினை தொடர 

திருமதி.ராஜி
திருமதி.ஆதி
திருமதி.ஏஞ்சலின்

அவர்களுக்கு அன்புடன் அழைப்பு தெரிவிக்கிறேன்.

Nov 18, 2011

கற்களாலான கலைமிகு தொகுப்புகளும்,வித்தியாசமான கலைவண்ணங்களும்@சண்டிகர்

இந்தியாவின் பஞ்சாப்,ஹரியானா மாநிலத்தின் தலைநகர்  சண்டிகர் மாநிலம்.சண்டிகர் தனி யூனியன் பிரதேசமாக உள்ளது.ஆங்காங்கு ப்ளாண்ட்(planned)சிட்டி,பிரில்லியண்ட் சிட்டி எனவும் எழுதப்பட்டுள்ளதைக் காணமுடிந்தது.வியாபாரப் பகுதிகளும்,சாலை போக்குவரத்தும் இந்தியாவில்தான் இருக்கிறோமா என்பதை சந்தேகப்படுத்தியது.எங்கும் சுத்தம்,சீரான கட்டிட அமைப்புகள்,நெரிசல் இல்லாத கடைகளின் கட்டிட அமைப்புகள்,இயற்கை அமைப்புகளுடன் அமைதியான சாலை போக்குவரத்து் இவைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே நாங்கள் சென்றது ராக் பார்க்கை சுற்றி பார்ப்பதற்கு.எதோ ராக் பார்க்காம் என்றபடிதான் சென்றோம்.நுழைவுச் சீட்டு பெற்றோம்.



நுழைவுவாயில்
 உள்நுழைந்தபோது ரெட்டை மூக்குத்திகள் பளபளக்க நுழைவுச்சீட்டை கிழித்து தந்தார் நம்மூர் முக சாயலில் அமர்ந்திருந்த  ஒரு  தென்னகப் பாட்டி. ”நீங்கள் தமிழா” என்றதும்,ஆமாம்  விருத்தாச்சாலம்தான் எனக்கு சொந்த ஊரு,இங்கதான் 20 வருடங்களுக்கு மேலா இருக்கிறோம்னு சொன்னார்.வரிசையில் போகவேண்டியிருந்ததால் பாட்டியின் அறிமுகம் நுழைவாயிலிலே முடிந்துவிட்டது.குகைக்குள் போவதுபோல இருந்ததால் சற்று பயமாகத்தான் இருந்தது. வித்தியாசமான பாறை அமைப்புகளில்  பாறைகளை தொட்டுப்பார்க்க கூட கைகளை நகர்த்தமுடியாத ஒத்தையடிப்பாதை,மிகக் குனிந்து செல்லும்படியான குகைகள், நுழைவாயில்கள் வித்தியாசமான சிற்பங்கள்,திடிரென தோன்றிய நீர்வீழ்ச்சிகளுடன் இயற்கை காட்சிகள் மனதிற்கு அமைதி,ஆச்சர்யம்,குதுகளிப்பை தந்தது.ஆனால் இங்கு எதுவும் இயற்கையானதல்ல,இயற்கை அமைப்பில் அனைத்தும் செயற்கையாக செய்யப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டபோது நம்ப முடியவில்லை.





இவைகளை விட பிரமாதங்கள் என்னவென்றால் இங்கு பல விலங்குகளின் உருவங்கள்,மனித பொம்மைகள்,சிலையாக செதுக்காமல் இயற்கை உருவ  வடிவமைப்பு பெற்ற கற்களின் தொகுப்புகள்,  உபயோகப்படுத்தப்பட்ட பொருட்களாலான உருவங்கள்,பானைகள்,உடைந்த செராமிக் டைல்ஸ்களால் வடிவமைக்கப்பட்ட உருவங்கள் பார்வையாளர்களை ஈர்த்தது.




 



 


இது மின்சார வாரியத்தினால உபயோகிக்கப்பட்டு
ஒதுக்கிவைத்தது சுவர்பதிப்பாக காட்சிதருகிறது.
  






உடைந்த கண்ணாடி வளையல்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மீன் தொட்டிகளின் காட்சிகளும் இருந்தன.இயற்கை உருவ கற்களின் தொகுப்புகளை இங்கே கிளிக் செய்து பார்க்கலாம்..

 நேக் சந்த் என்பவரின் முயற்சியிலும் ஆர்வத்திலும் உருவானதுதான் இந்த ராக் பார்க்.இவர் அரசாங்க அதிகாரியாக பணிபுரிந்தவராம்.இந்தியா சுதந்திரம் பெற்றபோது பாக்கிஸ்தானிலிருந்து சண்டிகருக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்.அப்போதே சண்டிகர் மாநிலம் சுவிச்சர்லாந்த் மற்றும் பிரான்சு கட்டிடக்கலைபடி வடிவமைக்கப்பட்டிருந்ததாம். அருகிலிருக்கும் மிகப்பெரிய ஏரிகளிலும்,நதிகளிலும் காணப்பட்ட அழகிய இயற்கையாகவே உருவம் பெற்றுள்ள கற்கள் நேக் சந்தை ஈர்த்துள்ளது.அவைகளை ஆர்வத்துடன் சேகரித்து காட்சிக்கு வைத்திருந்துருக்கிறார்.இங்குள்ள நீர்வீழ்ச்சிகளும் இவராலே வடிவமைக்கப்பட்டதாம்.

ஐம்பது வேலை  ஆட்களுடன் சுக்னா   ஏரிக்கு பக்கத்தில் இந்த ராக் பார்க்கை  வடிவமைத்துள்ளார். இந்த  காட்சியிடம் 30 ஏக்கர்   பரப்பளவு கொண்டதாம்.சண்டிகரின் மருத்துவமனை, உணவகம், மின்சாரவாரியம், பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களின்   நல்ல முழுமையான கழிவுப்பொருட்களை சேகரித்து விலங்கு மற்றும் மனித உருவ பொம்மைகள்  செய்ய பயன்படுத்தியிருக்கிறார்.சைக்கிளின் உதிரிபாகங்களாலான பொம்மைகள்  கூட சில இடங்களில் பார்த்த நினைவு உள்ளது.தாஜ்மகாலை அடுத்து இங்குதான் மக்களின் வருகை அதிகம் என  சொல்லப்படுகிறது. வெளிநாட்டிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் நாள்  ஒன்றுக்கு  தோராயமாக  ஐந்தாயிரம்  பேர் வருகைபுரிவதாக  கணக்கீடு உள்ளதாம். பஞ்சாப்  மாநிலம்  வந்தால்  இந்த ராக் பார்க்கை பார்க்க மறந்திட வேண்டாம்.

இரண்டு வருடங்களுக்கு முன் இங்கே சென்று வந்தோம்.நாங்கள் எடுத்த புகைப்படத்திலெல்லாம் எங்களின் முகமும் இருப்பதால் கூகிளிலிருந்தே படங்களை திரட்டியிருக்கிறேன்.

Nov 13, 2011

நிகழ்ந்தவைகளும் நிகழுபவைகளும்@13/11/2011

எல்லையற்ற உலகத்தில் மனிதனாகப் பிறந்த நாம் கண்களுக்கு தெரிந்த பாதையில் நமக்கு கிடைத்த வழிதடத்தில் சக்திக்கும் திறமைக்கும் உட்பட்டு வாழ்ந்து வருகிறோம்.கெடுதலும் நல்லவைகளும் நிறைந்த உலகில் மனதிற்கு கிறுக்கு பிடிக்காதவரை நல்லது நல்லவைகளாகத்  தெரியும்.கெட்டது கெட்டதாகத் தெரியும்.   தான் தோன்றித்தனம் வரும்போது நல்லது-கெட்டதாகத் தெரிகிறது.கெட்டது-நல்லதாகத் தெரிகிறது.இவைகளைக் கடந்து பக்குவம் அனுபவமாக கிடைக்கப்பெறுகையில் நல்லது கெட்டதுகளை  பிரித்து அனுகி வெளியேற முயற்சிக்கையில்  அதுதான் நமது வாழ்க்கையாகிறது.

வாழ்வையும் காதலையும் ஒரு வரியில் வரையறுத்துவிட முடியாது.போராட்டங்கள்,தேடல்கள்,சுகபோகங்கள்,ஏமாற்றங்கள்,அவமானங்கள்,கற்றல்கள்,வேதனைகள் இன்னும் எத்தனையோ? எல்லாம் நிறுத்திவைக்க முடியாத இந்த உயிரை வாழவைக்கத்தானே? இந்த வாழ்விற்க்காக அடிப்படைத் தேவைகளை தேடி இயங்கும் மனித உயிர் மகத்தானாதாகவும் அல்லது தராதரம் குறைவதும்   

எப்போது?
சூழ்நிலைதான் காரணமா?


தலைப்பிற்கு வருகிறேன்.

பிரி.கே.ஜி, எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்பு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வீட்டின் எதிரே ஒரு இடத்தில்   பெற்றோர்கள் காலை 8.15ற்கு பள்ளி (வண்டி)வேனிற்காக காத்திருந்து பிள்ளைகளை வழியனுப்பி வைப்போம்.அந்த சில நிமிடங்களில் பள்ளி,படிப்பு,குழந்தை முதல் குடும்பக் கதை வரை பேசுவது அனைத்து அம்மாக்களின் வழக்கம்.எதாவது ஒரு  குழந்தையின் அப்பா வந்தால் அவர் தனியாக அப்பாவியாக  நின்றுகொண்டிருப்பார்.இப்படியாக அந்த நிமிடங்கள் வேன் வரும்வரை கலகலப்பாக இருக்கும்.

எங்கள் பக்கத்து பிளாக்கில் என் மகளைவிட ஆறு மாதம் மூத்த வயது சிறுவன் அபிஜித்.அந்த ஐந்து நிமிட பழக்கம்தான் எனக்கும் அபிஜித் அம்மாவிற்கும்.வேன் வந்தவுடன் அவரவர் குழந்தைகளை அமர்த்திவிட்டு வேன் புறப்பட்டு குழந்தை கண்ணுக்குத் தெரியும்வரை தலையசைத்தோ,டாட்டா காமித்தோ வழியனுப்புவது பெற்றோர்களின் வழக்கம்.என் மகளுடன் விளையாட சில நாட்கள் என் வீட்டிற்கும் அபிஜித் வந்திருக்கிறான்.தொல்லை கொடுக்காத,சொல்வதை கேக்கும் நல்ல குழந்தை அவன்.

அபிஜித் பிரி.கே.ஜி முடித்து எல்.கே.ஜி போகும்போது அவனுக்கு தம்பியும் பிறந்தாகிவிட்டது.அதனால் பள்ளி வேனிற்கு அப்பாவுடன் வந்துகொண்டிருந்த அபிஜித் சில நாட்கள் வரவேயில்லை.அவன் வீடும் எப்போதும் பூட்டப்பட்டிருந்தது.விசாரித்ததில் அபிஜித்திற்கு தொடர்ந்து  காய்ச்சல்,வாந்தி இருந்ததாம்.மருத்துவப் பரிசோதனையில் பிரெயின் ட்யூமர் இருப்பதாகவும் உடனடி ஆப்ரேசனுக்காக லக்னோவில் இருக்கும் தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளதாக சொன்னார்கள்.அதிர்ச்சியாக இருந்தது.நலமுடன் குணமாகி அவன் வரவேண்டுமென மனசாட்சியுள்ள அனைவரும் விரும்பியிருப்பார்கள்.

சில மாதம் கழித்து ஆப்ரேசன் முடிந்து குணமாகி வந்துவிட்டான்.அவனை பார்த்ததில் எனக்கும் மகிழ்ச்சி.பள்ளி வேன் வரும் நேரத்தில் ஓடிவந்த அபிஜித்தை அவனது நெருங்கிய தோழியின் அம்மா ஆசையுடன் தூக்கிவைத்து கொஞ்சியதும்,கரகரப்பான குரலில் அவன் பேசியதும் யாருக்கும் மறக்கமுடியாது.மொட்டையடித்து முடி வளர்ந்திருந்த தலையுடன் வந்திருந்த அபிஜித் சில நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வருவான் என்றார் அவனது அப்பா.  

சில நாட்களுக்கு பின் அபிஜித் மீண்டும் லக்னோவிற்கு போய்விட்டான்.அவனது அப்பா மட்டும் இங்கிருந்தார்.எப்போதும் எங்கு அவரை பார்த்தாலும் அபிஜித் எப்படியிருக்கிறான் என்று கேட்பதுதான் வழக்கம்.அவரும் நலமுடன் இருப்பதாக சொல்வார்.தற்போழுது ஊரிலிருந்து வந்த எனக்கு இரண்டு நாள் கழித்துதான் செய்தி கிடைத்தது.அபிஜித் இறந்துவிட்டானாம்.தீபாவளியன்று குதுகலமாக இருந்தவன் அன்று இரவு லேசான காய்ச்சலுடன் படுத்தவன் விடியற்காலையில் வித்தியசமாக உதைந்ததைக் கண்டு அவனது அம்மா திடுக்கிட்டு எழுந்து பார்க்கும்போது நீண்ட சுவாசமாக கண்கள் பிதுங்கி இருந்தவனை பதறியடித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலே அவனது உயிர் பிரிந்துவிட்டதாம்.அவனுக்கு கிரியை  காரியமெல்லாம் முடிந்தபின்தான் இந்த செய்தி எனக்கு கிட்டியது.கேட்டதும் பெரிய உயிர் பிரிந்தாலே தாங்க முடியாத நிலையில் கண்கலங்கி நொந்துபோனேன்.முற்றிலும் மனம் பாதித்து போனோம்.

அவனது பெற்றோரை விசாரித்தாலும் கஷ்ட்டம்.விசாரிக்காமலும் இருக்க முடியாது.அந்த பெற்றோரின் நிலை யாருக்கும் வரக்கூடாது.லச்சக்கணக்கில் பணம் செலவானாலும்  அபிஜித்தின் உயிரை காக்க முடியாமல் அவர்களின் தவிப்பை சொல்ல முடியவில்லை.ஒரு நாள் பள்ளி வேன் வரும் நேரத்தில் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை ஜன்னல் வழியாகப் பார்த்து கதறி அழுவதை திரும்பி பார்க்க கூட தைரியம்வராமல் வந்த அழுகையை துடைத்துக்கொண்டேன்.

என் கையைப் பிடித்திருந்த என் மகள் ஏம்மா அழுகிறீங்க என்றதும் அபிஜித் இறந்துவிட்டதை மீண்டும் மகளிடம் சொன்னேன்.அவள் அப்பாவியாக இனிமே அபிஜித் ஸ்கூலுக்கு வரமாட்டானா என்று கேட்டாள்.பதில் சொல்வதற்குள் இவ்ளோ நாள் லீவ் போட்டான்னா அவங்க  மேம் திட்டப்போறாங்க என்கிறாள்.வாய மூடுன்னு கோபமாக சொன்னதைத் தவிர எனக்கு வேறு ஒன்றும் தோன்றவில்லை.வந்த வேனில் அனுப்பிவிட்டு வீடு வந்தேன்.வாழ்க்கையில் எவ்வளவு கொடுமையான நடைமுறைகளை அனுபவிக்க வேண்டியுள்ளது.

நல்லதுக்கு ஒன்று சேராட்டாலும் துக்கத்திலாவது ஒன்று சேரனும் என்பார்கள்.ஒரு சில வசதி படைத்த மனிதர்கள் அபிஜித் இறந்ததை விசாரிக்க கூட போகவில்லை.எங்களுக்கு பழக்கமில்லை என்று பதில் வந்தது.குழந்தையின் மரணம் கூட இப்படிபட்ட மனிதர்களை பாதித்துவிட இல்லை.

அடுத்த விசியத்திற்கு வருகிறேன்.வட மாநிலங்களில் அது நடக்கிறது,இது நடக்கிறதுன்னு பல பதிவுகள் பதிந்துருக்கிறேன்.ஒரு கன்ராவியும் நடைபெறுவதை சொல்ல விரும்புகிறேன்.நான் ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் இதற்கு பின்னூட்டங்கள் எப்படியிருக்கும்னு யூகிக்க முடியும்.சப்போர்ட் அல்லது எதிர்ப்பு தெரிவிப்பது படிப்பவர்களின் விருப்பம்.இங்கு பதிந்துவிட்டால் மட்டும் எந்த தீர்வும் நிகழப்போவது இல்லை.இருந்தாலும் என் பதிவை படிப்பவர்கள் தெரிந்துகொள்ள பதிகிறேன்.

எத்தனையோ வசதிகளுடன் மனிதன் வாழ்ந்தாலும் இன்னும் ஒருவேளை உணவிற்கோ,இருவேளை உணவிற்கோ போராடும் மக்கள் எத்தனை பேர் உள்ளனர்.அவர்களுக்கெல்லாம் பிழைக்கத் தெரியவில்லை என்று அர்த்தமா?எத்தனை திறமைசாலிகள் தமது திறமைக்கும்,விருப்பத்திற்கும் தகுந்த படிப்போ,வேலைவாய்ப்போ கிடைக்காமல் கிடைத்ததை வைத்து வாழ்ந்துகொண்டுள்ளனர்.எல்லாருக்கும் நிறை குறை எல்லாவற்றிலும் இருக்கும்.

ஒருவருக்கொருவர் மீதுள்ள நம்பிக்கையில் வாழ்க்கையை நகர்த்துகிறோம்.பிள்ளைகளோ கணவரையோ படிப்பிற்காக,பிழைப்பிற்காக வெளிநாட்டிற்கோ,வெளி மாநிலத்திற்கோ அனுப்புகிறோம்.ஹெச்.ஐ.வி  யுடன் இருப்பவனுக்கு வெளிநாடு செல்ல அனுமதியில்லை.இங்கிருந்து நல்லபடியாக போனவன் வரும்போது ஹெச்.ஐ.வியுடன் வந்தால் எந்த அரசும் பொறுப்பேற்காது.அவன் செய்த தப்பிற்கு யார் என்ன செய்ய முடியும்.தப்பு செய்வதற்கு குடும்பத்துடன் இல்லாமல் இருப்பது மட்டும் காரணம் அல்ல.தப்பு செய்ய மனது துணிந்துவிட்டால் கோவிலுக்குள் இருந்தாலும் நடந்தாகிவிடும்.

கள்ளக் காதல்,கள்ளத் தொடர்பு அங்காங்கு ஊடுருவி இருப்பதை அக்கம்பக்கத்தில் கேள்விப்பட்டிருப்போம்.செய்தித்தாளில் படித்திருக்கலாம்,செய்தியாக கேட்டிருக்கலாம்.டெல்லி,மும்பாய் போன்ற இடங்களில் விபச்சாரத்திற்கென்று தனி இடங்கள் இருப்பதை கேள்விப்பட்டிருப்போம்.ஒரு நிகழ்வை அடிக்கடி பார்த்ததில் மன வேதனையுடன் துணிச்சலாக இதை சொல்கிறேன்.

அவ்வப்போது தமிழ்நாடு வரும் நாங்கள் மெயின் தில்லி ரெயில்வே ஸ்டேசன் வருகிறோம்.ஆனால் ஒவ்வொருமுறை தமிழ்நாட்டிலிருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரசில் வரும்போது தில்லி ரெயில்வே ஸ்டேசன் வெளிவாயிலை கடக்கும்போது ஒன்று அல்லது இரண்டு பெண்கள் வெளியே வரும் ஆண்களை குறிவைத்து தேசியக்கொடியை சட்டையில் குத்தி முகவரி வேண்டுமா.?ஃபோன் நம்பர் வேண்டுமானு கேட்டு வருகிறார்கள்.அவர்கள் சிவப்பு விளக்கு பகுதி பெண்களாம்.

வேண்டாமென்று பிடிவாதமாக விளக்கும் ஆண்களை அவர்கள் கட்டாயப்படுத்துவதில்லை.ஒருமுறை கூட்டத்தில் கணவரை விட்டுவிட்டேன்.கணவர் வலது பக்கம் போயிருக்கிறார்.நான் இடது பக்கம் போய்விட்டேன். மெயின் கேட்டிற்கு வந்தாக வேண்டுமென மொபைலில் அழைக்க முயற்சித்துக்கொண்டிருந்தேன்.அப்பதான் பார்த்தேன் நடுத்தர வயதான ஒருவரின் சட்டையில் கொடி குத்திக்கொண்டே ”ஆஜாவ்,ஆஜாவ்,ஆஜாயிங்கே(வா,வா,வறீங்களா) என்றார் அந்த பெண்.அவர் அய்யோ என்றதும் அந்த பெண் தமிழிலும் அழைத்தார்.

அதற்குள் என் கணவர் என் எதிரே வந்துவிடவும்(திட்டும் வாங்கினேன்) நாங்கள் அந்த இடத்திலிருந்து கிளம்பிவிட்டோம்.ஆனாலும் நான்  திரும்பி பார்த்துக்கொண்டே வந்தேன். அந்த நபர்  அந்த பெண்ணிடமிருந்து  தனது மொபைலில்  எதோ குறித்தவண்ணமிருந்தார். அதற்குபின் என்ன ஆனதோ யாருக்குத் தெரியும்.யார் பெற்ற பிள்ளையோ,யாருடைய கணவனோ,யாருடைய சகோதரணோ,

இந்த ஆறுவருடங்களில் ரெயில்வே ஸ்டேசன் வெளி வாயிலில் இப்படியான பெண்கள் அங்கும் இங்கும் சுற்றி ஆள் பிடிப்பதை பார்த்திருக்கிறேன்.அவர்கள் பயன்படுத்தும் கொடிதான் இன்னும் வேதனையான விசியம்.பல ஆண்கள் தவிர்த்து செல்வது கொஞ்சம் ஆறுதலான விசியம்தான்.இந்தக் காட்சிகளை அந்த வாயிலைக் கடக்கும் சில நிமிடங்கள் மட்டுமே பார்த்திருக்கிறேன். அங்கிருக்கும் போலிஸ்,வியாபரிகள் வழக்கமாக வந்து செல்லும் அனைவரும் பார்க்கிறார்கள்.யாரும் எதிர்ப்பதாகத் தெரியவில்லை.சில சிக்னல்களிலும் இப்படியான பெண்கள் சுற்றி அழைப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.யாரை என்ன குற்றம் சொல்ல முடியும்.

இவைகளெல்லாம் நிறைந்துள்ள இவ்வுலகில் மனிதனாக,மனசாட்சியுள்ளவராக வாழ்வது வாழ்க்கைக்கு சவால்தான்.

மற்றபடி இங்கு இப்போழுது குளிர் ஆரம்பித்துவிட்டது.
இனி மனிதனுடன் இவர்களும் குளிர் காப்பு ஆடைகளுடன் காட்சி தருவார்கள். (படங்கள் அனைத்தும் சென்ற வருட குளிர் காலத்தில் வழிப்போக்கில் கிளிக்கியது)