*வணக்கம் வருகைக்கு நன்றி*

Aug 31, 2012

கனவு பலித்துவிட்டது

வணக்கம் ,
அனைவரும் அனைத்து நலன்களுடன் வாழ வாழ்த்துகள்.

அவ்வப்பொழுது சில பதிவுகளை படிச்சேன்,நம்ம VGK சார் தனக்கு கிடைத்த விருதுகளில் இரண்டு விருதுகளை எனக்கும் பகிர்ந்தளித்துள்ளார்,குட் பை சொன்ன பதிவர்கள் லிஸ்ட்டில் என்னையும் குறிப்பிட்டுள்ளார் எனக்கு அறிமுகமில்லாத ஒரு பதிவர்.(அட அந்தளவுக்கு மதிக்கப்படுறனேனு ஒரு ஓஹோ போட்டுகிட்டேன்).சென்னையில் பதிவர்கள் சந்திப்பு நடந்துள்ளது,அதில் பங்குபெற்றவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துள்ள பதிவுகள்,என்னால் முடிந்ததை நேரத்தை மிச்சப்படுத்தி,நேரத்தை இழுத்துப் பிடித்து பதிவிட வேண்டுமென்ற ஆர்வமும் அதிக இடைவெளி வேண்டாம்,முடிந்தால் அவ்வப்போது பதிவிடுங்கள் என சிலர் ஊக்கமளித்தது,இவைகளெல்லாம் இன்றைய என் பதிவிற்கு காரணங்கள்.(கோபமோ,உருட்டுக்கட்டையோ வந்தால் எனக்கு ஊக்கமளித்தவர்களின் முகவரி தந்துவிடுகிறேன் முதலில் அங்க போயிட்டு வாங்க)

சரி மேட்டருக்கு வருவோம்.

கடந்த மே மாதம் தமிழகத்திற்கு எங்க  சொந்த ஊருக்கு  சென்றிருந்தோம்.அங்கு பெரிய பிரச்சனையாக அல்ல பெரும் அவதியாக பவர் கட்  உபச்சாரம் இருந்தது.கிராமங்களில் பவர் கட்டானாலும் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும் வசதியுடன் இருப்பவர்களை விரல் விட்டு எண்ணிடலாம்.அதிலும் சிலர் ஏசி இல்லாமல் இருக்க முடியலப்பான்னு சொல்லும்போது யாரை நொந்துக்கிறது.அல்லது இப்படியானவர்கள் மின்சாரத்தை மிச்சம் செய்தால் குறைந்தது ஒரு ஊருக்காவது முழு நேர மின்சாரம் கிடைத்திடுமா?.



மின்சாரத்  தடையினால் அவதிப்பட்டவர்களுக்கே  அந்த அருமை அல்ல கொடுமையை உணரமுடியும்.குழந்தைகளுக்கும்,படிக்கும் மாணவர்களுக்கும்,நோயாளிகளுக்கும்,வயதானவர்களுக்கும்   அதுவும் வெயில் காலங்களில் அவர்களின் வேதனைக்கு அல்ல பொறுமைக்கு மிகப்பெரும் சோதனை இந்த பவர் கட்.வீட்டின் பக்கத்தில் மரங்களோ குளம் குட்டையோ இருக்கிறவர்களுக்கு சற்று பரவாயில்லை.பல இடங்களில் மரங்கள் மரமாகவே சற்றும் அசையாமல் நிற்கின்றது.

முழு நேரமும் மின்சாரம் இல்லாமல் நம் தாத்தா பாட்டி,அவர்களுக்கு  தாத்தா பாட்டி  காலங்கள் கழிக்கவில்லையா?,அதே போல நாமும் வாழ கத்துக்கனும். சும்மா பூச்சாண்டி காட்டுவது போல நமக்கு அவ்வப்பொழுது புண்ணியத்திற்கு தரும் மின்சார விநியோகத்தையும் நிறுத்திவிட்டு எல்லா மின்சாரத்தையும் தொழில் நிறுவனங்களுக்கும்,கல்வி நிறுவனங்களுக்கும் தொடர் மின்சாரமாக தந்தாலாவது தொழில்கள் நல்லபடியா நடந்து நடுத்தர மக்களின் வேலை வாய்ப்பு,வருமானம் பாதிக்காமல் இருக்கும்.ஏனெனில் மின்சாரத் தடை காரணமாக தொழிலாளர் குறைப்பு,குறுந் தொழில் பாதிப்புகள் அதிகமாவது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

மின்சாரத் தடையினால் வேதனையான பாதிப்பாக நான் பார்த்து வேதனைப்பட்ட மற்றொன்று தண்ணீர் பற்றாக்குறை.இப்போதும் மின்சாரமே இல்லாமல் குக்கிராமங்கள் இருக்கின்றதாம்.எங்கிருக்கோ தெரியாது.ஆனால் குடி தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படும் ஊர்களை என்னால் குறிப்பிட்டு  சொல்ல முடியும். காலை கரண்ட்,மதியான கரண்ட் என்கிறார்கள்.அந்த வேலைகளில் மோட்டார் போட்டு தண்ணீர் ஏற்றினால்தான் தெருக்குழாய்களில் தண்ணீர் வரும்.கரண்ட் எப்ப வரும் போகும்னு சப்ளே ஆன்,ஆஃப் பன்றவருக்கே தெரியுமோ தெரியாதோ தெரியல.


உதாரணமாக நான் வாக்கப்பட்ட ஊரில் நல்ல நாளிலே தண்ணீர் பஞ்சம்தான்.குழாயடி கேள்விப்பட்டிருப்போம்.என் மாமியார் ஊரில் உண்மையிலே குழாய் பூமிக்கு அடியில் குறைந்தது 3 அடிக்கு கீழ்தான் இருக்கும்.குழிக்குள் குழாய் இருக்கும்.குழிக்குள் இறங்கிதான் நீர் பிடிக்க வேண்டும். சாதரணமாக மோட்டார் போட்டாலும் தண்ணீர் வராது.அதிகம் செலவு செய்து மிகவும் பவர்ஃபுல் மோட்டாரில்தான் தண்ணீர் பெற முடியும்.ஆனால் இப்போ பவர்?...........

தாசில்தார் அலுவலகத்தில் க்ளர்க்காக வேலை செய்யும் பெண் இந்த குழாயில் தண்ணீர் வருதா,அந்த குழாயில் தண்ணீர் வருதான்னு தெருத்தெருவா அலைந்து குடிநீரை பிடிச்சு வச்சுட்டு நாலு வயது மகளுக்கு  கடையில் இட்லி வாங்கிக்கொடுத்து கடை சாப்பாடே லன்ச் பாக்சிலும் வைத்து  பள்ளிக்கு அனுப்பிவிட்டு,தானும் கிளம்பி ஒரு மீட்டர் தூரம் நடந்து போய்  பஸ் பிடிக்கனும்.பிறகு இறங்கின இடத்திலிருந்து வெகுதூரம் நடந்து போய்தான் அலுவலக நாற்காலியைப் பிடிக்கனும்.வேலை விட்டு வந்தால் குழாயில் தண்ணீர் வருதுன்னு தெரிந்தால்,நாளைக்கு தண்ணீர் வருமோ வராதோ இப்பவே ரெண்டு குடம் பிடித்து வைத்தால் உதவும்னு மீண்டும் குடத்துடன் ஓடும் பெண்ணைப் பார்த்து மனம் ஆரவில்லை.அம்மாவைப் பார்க்க அந்த குழந்தை தெருவில் சுற்றுவதையும்,வீட்டை விட்டு ஏன் வெளியில் வந்தன்னு அந்த தாய் எல்லா மன அழுத்தத்தின் சாரலாய் திட்டுவதும் அடிப்பதையும் பார்த்தபோது,உன் குத்தமா,என் குத்தமா காலம் செய்த கோலமடின்னுதானே சொல்லத் தோனும்.இது ஒரு துளி உதாரணந்தாங்க.


கரண்ட் போயிடும் சீக்கிரம் கிரைண்டரில் மாவரைக்கனும்,கரண்ட் போய்டும் சீக்கிரம் சட்னி ரெடி பன்னனும்,சட்னியோ,மாவோ அரைத்துக்கொண்டிருக்கையில் சப்ளே போச்சுன்னா நிலவரம்  என்னான்னு புரிந்திருக்கும்.இரவு நேரங்களில் கரண்ட் போய்டும் சீக்கிரம் சாப்படு ரெடி செய்து சாப்பாடு போடனும்....,வேலை விட்டு சீக்கிரம் வீட்டுக்கு போகனும்,வழியில் கரண்ட் இல்லைன்னா ரொம்ப கஷ்டமாகிடும்,...இப்படி பல.நடுத்தர குடும்பத்திற்கு டைம் டேபிளே அதாவது குடும்ப வேலைகளை,பொறுப்புகளை இப்போ நிர்ணயிப்பதே இந்த கரண்ட் நிற்பதும்,வருவதும்தான்.அதுவும் இரவில் காற்றாடி சுத்தாமல் வியர்வையில் தூங்க முடியாமல் தவிக்கும் குழந்தைகளைப் பார்ப்பது பெரும் கொடுமை.மின்சாரத் தடை பற்றின இந்த பதிவு மிகவும் தாமதம்தான்.

ஆனால் சார்ஜபிள் லைட் இருப்பது போல சார்ஜபிள் ஃபேன் அதாவது ஜார்ஜபிள் டேபிள் ஃபேன் (காற்றாடி) வந்திருக்குன்னு நிறைய பேருக்கு தெரியல.சப்ளே இருக்கும்போது சார்ஜில் போட்டு வைத்தால் சப்ளே நிக்கும்போது ஃபேன் போட்டுக்கலாம்.அதிலே அட்டாச்சுடு லேம்புகளும் இருக்கிறது. இரவு நேரத்தில் வெளிச்சத்திற்கும் உதவுமே.சார்ஜபிள் ஃபேனின் தரத்தைப் பொறுத்து விலையும்,சார்ஜிங் நேரமும் இருக்கிறது.ரூபாய் 2300 முதல் 3500 ரூபாய் வரையும் சப்ளே இல்லாத போது இரண்டு முதல் மூன்று  மணி நேரம் வரை காற்றினால் சற்று இளைப்பாறலாம்.குழந்தைகள் இருக்கும் வீட்டிற்கு அவசியமான ஒன்று இந்த சார்ஜபிள் ஃபேன்.

 சந்தோசங்களும், துக்கங்களும்,ஏமாற்றங்களும்,அழிவுகளும் பல வழிகளில் உண்டு.மின்சாரத் தடையாக இருக்கட்டும் அல்லது நாட்டில் நடக்கும் பல கோடி ஊழல் பற்றியோ அல்லது மனித உரிமைகளை அல்ல வாழ்வை சீண்டிப்பார்ப்பவர்களின் சுய ரூபம் தெரியவந்தாலும் ஏன், எப்படி, எதற்கு,தீர்வென்ன என்று தெரிந்துகொண்டு போராடினால் தன் குடுபத்தின் பட்டினையை  யார் போகுவார்,எனவே  தீர்வு எங்கிருந்தோ வரட்டும் பார்த்துக்கொள்வோமென இவைகளை கட்டாயமாக சகித்துக்கொண்டு வாழும் மக்கள் செய்த பாவம் என்ன?

வல்லரசாகிட்டோம்,வல்லரசாகிக் கொண்டிருக்கிறோம் அல்லது ஆகிடுவோம், கனவு பலித்துவிட்டது என்று  அனைவரும் மனதார  சொல்லும் நாள் வர வேண்டும்.